போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது. சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது. இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
.
தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியதாவது:
மண்ணுக்கு மரம் காவல், மரத்திற்கு இலை காவல், பயிருக்கு வேலி காவல், உயிருக்கு உடல்காவல், கண்ணுக்கு இமை காவல், கடலுக்கு கரை காவல் என்பது போல காப்பது ஒன்றையே கடமை என செயல்படுவதுதான் காவல் துறை. அந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் சிலர் காவல் துறை எப்படி பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சில் கட்சி கண்ணோட்டம் இருந்தது. சிலர் பாராட்டு தெரிவித்தனர்.
உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. இதில் தலை சிறந்தது நாக்கு. சாமர்த்தியமாக, சாதுர்யமாக, திறமையாக செயல்படுவதில் நாக்குக்கு இணை எதுவும் இல்லை. வாயில் நாக்கை சுற்றி 32 பற்கள் உள்ளன. இது அந்த நாக்கை கடித்து குதறி கிழித்து விடும் கூர்மை பெற்றவை. ஆனாலும் இந்த சாமர்த்தியமான நாக்கு 32 பற்களுக்கு இடையே இருந்து திறமையாக, வெற்றிகரமாக காலம் தள்ளி வருகிறது.
போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.
கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது. சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது.
இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் (முதல்வர் இப்படிச் சொன்னபோது டமமெவன்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டினர்)
தமிழகத்தில் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஜெயலலிதா எப்போது தவறு செய்வார், பிழை செய்வார் என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல பத்திரிகைகளும், தொலைக்காட்சியினரும் ஜெயலலிதா தவறு செய்ய மாட்டாரா? அதை வைத்து பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கலாம், டிவிக்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்தலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியிலே செயல்படும் மத்திய அரசோ ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டாரா? இனி நாம் தமிழகத்தைவாழ விட கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். ஜெயலலிதா விடுக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நாம் சலுகைகளை வழங்கினால் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக மாறி விடுவார் என்று மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் மண்ணெண்ணெய் வேண்டுமா? அதை உடனே 50 சதவீதமாக குறைத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள்.
தமிழக முதலமைச்சர் எத்தனை முறை கேட்டாலும் அவருக்கு நிதி வழங்காதே என்று நிதித்துறைக்கு கட்டளையிடுகிறார்கள். தமிழகம் மின் பற்றாக்குறையால் திண்டாடுகிறதா? அந்த மக்களே இருளில் தவிக்கிறார்களா? கவலையில்லை. தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வழங்காதே என்று இப்படி பல உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கிறது.
தமிழகத்தை வாழ விடக் கூடாது. தமிழகம் தலை நிமிர்ந்து விடக் கூடாது என மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை ஏவுகிறது. இத்தனை இடையூறுகள் செய்தாலும் போதுமான மண்ணெண்ணெய் வழங்காவிட்டாலும், மின்சாரம் வழங்காவிட்டாலும் நிதி ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இங்கு இயன்ற வரையில் நிதி ஆதாரங்களை திரட்டி வெற்றிகரமாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
இப்படி என்னை சுற்றி மத்திய அரசும் சரி, இங்கே உள்ள எதிர்க்கட்சிகளும் சரி. எதிரிகளாகவே உலா வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக ஆட்சி செய்வதுடன் பல்வேறு சாதனைகளையும் நாம் செய்து கொண்டு வருகிறோம்.
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவற்றை மீறி தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வேதனைகளை சாதனைகளாக்கி இந்த ஆட்சியை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அதனால்தான் நான் என்னுடைய நிலையை நாக்குக்கு இணையாக கூறினேன்.
வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா கூறியது போல இங்கு என்னை வசைப்பாடியவர்களுக்கும், இங்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.



0 Responses to நாக்கின் நிலைதான் என் நிலையும்- ஜெ.