Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ‘இளந்தளிர்’ எனும் மாபெரும் நாடக நிகழ்வென்று நேற்று முன்தினம் ரொறன்ரோவில் மார்க்கம்-ஷெப்பேர்ட் சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள சீன கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஈழத்தமிழர்களின் வரலாற்றினையும் அடையாளங்களையும் எடுத்தியம்பும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு, பாடசாலை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் அரங்கேற்றப்பட அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற நடந்தேறியது.

இளையோரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழர்களின் பல்வேறு கலைவடிவங்கள் இங்கு அரங்கேற்ப்பட்டன. கனடிய தேசியப் பாடலும், தமிழீழக் கொடியேற்றப் பாடலும் மாணவர்களால் மேடையில் இசைக்கப்பட கொடியேற்றத்துடனும், அகவணக்கத்துடனும் நிகழ்வு ஆரம்பமாகியது.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் ஒருங்குசேர தமிழர் சமூகத்தின் பல்வேறு கலைவடிவங்களைத் திரட்டித் தனியொரு மேடைநிகழ்வாக, தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் நாளை மலரும் தமிழீழத் தனியரசு வரையிலான காட்சிப்படுத்தலாக பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுத் தன்னகத்தே கூட்டிச்சென்று அவர்களையும் அக்காலகட்டங்களை உணரவைப்பதாக விரிந்தன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒன்றாரியோ புதிய ஜனநாயகக் கட்சியின் தவிசாளரான நீதன் சண் கலந்துகொண்டு உரையாற்றுகையில், சிங்கள அரசு எமது வரலாற்றினையும் அடையாளங்களையம் அழித்துவிடக் கங்கணங்கட்டிச் செயற்பட்டுவரும் இவ்வேளையில், அதனைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பாரிய பொறுப்பும் திறனும் இளையோர் கைகளிலேயே தங்கியுள்ளன என்பதுடன் அவர்கள் அவற்றைச் சரிவரச் செய்வார்கள் என்ற அசையாத நம்பிக்கை தனக்குண்டு என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கனடா தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சாளரான செல்வன் பிரியந்த நன்றியுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டு, கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

0 Responses to கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ஈழத்தமிழ் அடையாளங்களி​னுடனான ‘இளந்தளிர்​’

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com