Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பௌத்த காணிகளையும் உரிமைகளையும் அந்நிய மதங்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது இலங்கையில் பௌத்தர்களே பெரும்பான்மை இனத்தவர்கள் என்பதை இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல் பே சோபித தேரர் தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கைக்குள் புகுத்திய பல்கழக கொள்கைகளினாலேயே இலங்கையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் அரசியலமர்வில் பௌத்தர்களுக்கு உள்ள தனித்துவத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத வேற்றுமை குறித்து எமக்கு யாரும் கற்பிக்க தேவையில்லை. எனவே பௌத்த புனித பூமிக்குள் அத்து மீறி இருக்கும் ஏனைய மதஸ்தலங்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல்வாதிகள் சுய நலத்துடன் செயற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய நூலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல் பே சோபித தேரர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் தம்புள்ளையில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் வழிபாட்டுத் தலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது. 2300 க்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட சிங்கள பௌத்தத்திற்கு எவ்வாறு சக அந்நிய மதங்களுடன் வாழ வேண்டும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல.

தம்புள்ள பூமி பௌத்தர்களின் பாரம்பரிய புனித பூமியாகும். இங்கே வியாபார நோக்கத்திற்காக வந்த முஸ்லிம் இனத்தவர்கள் மிகவும் சூழ்ச்சிகரமாக ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு நிலை கொண்டனர். பௌத்த பூமியில் தார்மீக உரிமையற்ற வகையில் மேற்படி வழிபாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைச் சட்டத்திற்கும் முரணானதாகும்.

முஸ்லிம் வழிபாட்டு நிலையத்தை அமைக்க அரசியல் தலைவர்களும் உதவிகளை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நிலைப்பாடு காணப்பட வேண்டுமாயின் தம்புள்ள முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றப்பட வேண்டும். சர்வதேச சூழ்ச்சிகளுக்குள் இலங்கை சிறைப்பட்டு இருக்கையில் இவ்வாறான மதச் சண்டைகளை சூத்திரதாரிகள் ஏற்படுத்தலாம். எனவே ஜனாதிபதி இரு கண் கொண்டல்ல ஆயிரம் கண்களைக் கொண்டு பிரச்சினைகளை ஆராய வேண்டும் எனக் கூறினார்.

உதய கம்பன் பில

இதன் போது உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்பன் பில கூறுகையில்,

தம்புள்ளையில் அமையப் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய முஸ்லிம் வழிபாட்டுத் தலம் 1962 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்தில் காணப்படுவது என்பது போலியான தகவல்களாகும். நேரடியாகவே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசிய பின்னரே இது தெரிய வந்தது. எனவே ஜெனீவாவில் இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் உதவி செய்தன. உண்மை தான். இதற்கு நன்றி கூறியுள்ளோம். ஆனால் சர்வதேச அழுத்தங்களை காரணமாகக் கொண்டு பௌத்த உரிமைகளை அழிக்க முற்படுவதை அனுமதிக்க முடியாது.

அசாத் சாலி மற்றும் ஆளுநர் அலவி மௌலானா அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் உண்மைகளை அறிந்து பேச வேண்டும் எனக்கூறினார். நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில்,

பௌத்த காணிகளை அந்நிய மதத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர். இதனை சிங்கள தலைமைத்துவங்கள் உரிய வகையில் புரிந்து கொள்ளாததனாலேயே தேவையற்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உள்நாட்டில் பல் சமூக கொள்கைகள் விஸ்தரிக்கப்பட்டன. இதனால் பௌத்தர்களின் உரிமைகளும் தனித்துவமும் மெது மெதுவாக ஏனைய மதத்தவர்களால் அழிக்கப்பட்டது. இதனை தொடர அனுமதிக்க முடியாது.

இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதையும் அரசியலமைப்பில் காணப்படும் சிறப்புரிமைகளையும் ஏனைய மதத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் பௌத்த சிலை உடைக்கப்பட்டபோது எவ்விதமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத முஸ்லிம் தலைவர்கள் தம்புள்ளயில் அமைக்கப்பட்ட சட்ட விரோத கட்டிடம் தொடர்பாக பேசுவதில் அர்த்தமில்லை என்றார்.

0 Responses to அந்நிய மதங்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: தேரர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com