வன்னியில் நடந்த போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்துமாறு சர்வதேசம் கடும் அழுத்தங்களை வழங்கி வந்தபோதும் போரைத் தொடர்ந்து நடத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக உத்தரவிட்டார் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக உறுதியாக இருந்தார்.
2009 ஏப்ரலில் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கையில் மனிதாபிமானப் போரை நிறுத்துமாறு சர்வதேசத்தின் கடும் அழுத்தங்கள் இருந்தபோதும் அதற்கு அடிபணியவில்லை. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. போரை நிறுத்தக் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதும் தனிப்பட என்னைத் தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி, திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கையைத் தொடருங்கள் என்று எனக்கு நேரில் உத்தரவிட்டார். அவ்வளவு உறுதியானது எங்கள் நாட்டின் அரசியல் தலைமை. நாங்கள் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பலத்தை அதுவே வழங்கியது” என்று ஜகத் ஜயசூரிய கூறினார் என்று இராணுவத் தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவித்தது.
இராணுவத் தளபதி குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே வன்னியில் மிகப் பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன என்று ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையிட்டுள்ளது. இறுதிப் போரில் 40,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்தவர்கள் நீதி விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும் பெண்கள் வன்புணரப்பட்டார்கள் என்றும் “சனல்4′ தொலைக்காட்சி “சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ மற்றும் “தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற இரு ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தது.
நடந்த மனித உரிமை மீறல்கள் அனைத்துக்கும் அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்களே நேரடியான பொறுப்பு என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் அரசு அதனைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.



moons cannot be punished for breaking of nights as sun behind for this - a wounded heart.