தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முதல்வர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் டில்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., வலியுறுத்தினார்.
மத்திய- மாநில உறவு பாதிக்காது: பிரதமர் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில்: பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் வேளையில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் முக்கியத்துவமாக அமைகிறது. பயங்கரவாதம் ஒழிக்க மத்திய , மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இதில் மாநில உரிமைகள் எதுவும் பாதிக்கப்படாது. மத்திய, மாநில அரசு உறவுகள் இடையிலான எதிரானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இரு உறவும் பாதிக்காது. இந்த விஷயத்தில் மாநில முதல்வர்களின் மனம் திறந்த கருத்துக்களை நாங்கள் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம். எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
இந்த மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ; தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்தூணாக உள்ளது. மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்த பயங்வரவாதம் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் வான்வழி, கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது போன்ற அமைப்புகள் ஜெர்மனியிலும் உள்ளது. இந்த மையம் நாட்டின் பாதுகாப்பாக அமையும் என்றார்.
முதல்வர்குழு அமைக்க ஜெ., வலியுறுத்தல்; மாநாட்டில் பங்கேற்ற ஜெ., பேசுகையில்; இந்த மையம் அமைப்பது தொடர்பாக எனது அரசுக்கு எவ்வித தகவலும் வரவில்லை. ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் சொன்ன பின்னரே தெரியவந்தது. இது உள்துறையின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டறிய வேண்டும். உளவுத்துறை பலவீனமானதால் இந்த தேசிய பயங்கரவாத மையம் அமைக்கப்படுகிறது. மாநில அரசின் அதிகாரத்தை பாதிக்கும் இது குறித்து ஆய்வு நடத்த முதல்வர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்தக்குழு தரும் அறிக்கையின்படி முடிவுகள் எடுக்க வேண்டும். இதுவரை இந்த திட்டத்தை அமல்படுத்தப்படக்கூடாது. மாநில அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் அழிக்கும் நோக்குடன் மாநிலங்களில் அமைக்கப்படவிருக்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த மாதம் உள்துறை அமைச்சகம் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவிருந்தது. ஆனால் முதல்வர்களின் எதிர்ப்புக்கள் அதிகம் இருந்ததால் மே 5 ம் தேதி தனிப்பட்ட ஆலோசனை கூட்டம் நடக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். இதன்படி இன்று இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக இந்த பயங்கரவாத தடுப்பு மையத்தில் அதிகாரம் இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்., உள்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என குறை கூறினார்.
இன்று காலையில் டில்லிக்கு புறப்படும் போது சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெ.,; தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்காகத்தான் டில்லி செல்கிறேன். எங்கள் தரப்பு கருத்துக்களை கூட்டத்தில் எடுத்துரைப்பேன். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. கட்சியின் நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என்றார்.



0 Responses to தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்?