சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வருகிறது.
இந்நிலையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தி, ஈழத்தமிழர்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதிபூணுவோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
கவனயீர்ப்பு நிகழ்வுகள், பரப்புரைகள், வணக்க நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் என பல்வேறு வகையிலும், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்த உலகெங்கும் வாழும் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலில், சிறிலங்கா தொடர்பில் அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உரக்க வலியுறுத்துவதோடு, ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை உரக்க கோருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
திட்டமிட்ட இனவழிப் போர் ஒன்றினை நடாத்தி, தமிழர்களின் நிலத்தினை வல்வளைப்பு செய்துள்ளதோடு, தமிழர்களை தனது இனவாதப்பிடிக்குள் வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கமானது, தனது மாகாண ஆளுநர்களின் தலைமையில், போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வுகளை, தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்க தயாராகி வருகின்றது.
ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தாயக தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை, போரில் மடிந்தவர்களை நினைவுகூர்ந்து வெளிப்படுத்த முடியாத இன்றைய இலங்கைத்தீவின் சூழலில், இனநல்லிணக்கம் என சொல்லாடல் ஊடாக சர்வதேசத்தினை ஏமாற்றி வரும் சிறிலங்கா அரசாங்கமானது, தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே, இந்நிகழ்வுகளை முன்னெடுக்க முனைகின்றது.
இதேவேளை, மே-18ஆம் நாள் போரின் வெற்றிநாளாக காலி முகத்திடலில் வெற்றி அணிவகுப்புக்கு சிங்கள தேசம் தயாராகி வருகின்றது.
இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை உறுதியெடுப்போம். சிறிலங்கா தொடர்பில் ஒரு சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துவோம்!
ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாளர் நாயகத்தை கோருவோம்!
மேற்கூறிய கோரிக்கைககைள சர்வதேசம் நோக்கும் இன்னும் உரக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் முழங்குவோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம் | தமிழீழ அரசாங்கம்
பதிந்தவர்:
தம்பியன்
04 May 2012



0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம் | தமிழீழ அரசாங்கம்