Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் இருந்து பில்லா 2 திரைப்படத்திற்கு வெளியான மோசமான விமர்சனங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தின… 1000 ரூபா டிக்கட் எடுத்து படத்தை பார்க்கப் போகவே தயக்கமாக இருந்தது.

இவ்வளவு பணத்தை செலவிட்டு படம் எடுத்து இப்படி நாசம் செய்கிறார்களே என்ற வேதனையும் ஏற்பட்டது.

ஆனால்..

ஏற்கெனவே பல குப்பைப் படங்களை ஆகா ஓகோ என்று தமிழக ஊடகங்கள் புகழ்ந்துள்ள காரணத்தால் ஏற்பட்ட சந்தேகத்தில் பில்லா – 2 ஐப் பார்க்கப் புறப்பட்டோம்.

படத்தின் முதலாவது காட்சி இராமேஸ்வரத்தில் வந்திறங்கிய ஈழத் தமிழனே பில்லா என்ற செய்தி வந்ததும், படம் நம்மை கதிரையின் விளிம்பிற்குக் கொண்டு வந்துவிட்டது.

அடடா நல்லவேளை தமிழக விமர்சனங்களை நம்பி மோசம்போய்விடவில்லை என்ற எண்ணம் மலர்ந்தது.

அகதி முகாமில் உடல் ஊனப்பட்டவன் ஒருவன் தலையாரியாக இருந்து அகதிகள் மீது கட்டப்பஞ்சாயத்து செய்ய அவன் கன்னத்தில் பளீரென விழும் முதலாவது அடி.. மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

அகதிகள் மீது கட்டப்பஞ்சாயத்து செய்யும் அதிகார வர்க்கத்தை ஊனப்பட்டவர்களாக சிம்போலிக் செய்தது மிகப் பெரிய கலைத்துவமாகும்.

ஈழத் தமிழனை அழிக்கக் கங்கணம் கட்டிய அத்தனை பேரையும் பில்லா தூள் பொறியாக்குகிறபோது தமிழன் பட்ட துன்பங்களுக்கு ஒவ்வொரு அடியும் ஒத்தடம் கொடுக்கிறது.

பில்லா அக்காவை சென்னையில் கண்டபோது அவன் இடுப்பில் இருந்து துப்பாக்கி விழும்.. அப்போது தாய் சொல்வாள் – நீ இன்னமும் திருந்தவில்லையா என்று..

பில்லா ஈழத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய ஒருவன் என்பதை கச்சிதமாக பதிவு செயயும் இடம் அது.

இரமேஸ்வரம் அகதி முகாமில் பில்லாவுடன் வெளியேறிய இன்னொரு தன்மானமிக்க தமிழனை இறுதியில் கொன்றுவிடுவார்களோ என்று பயப்பட, இருவரையுமே உயிருடன் தப்ப வைப்பது பாராட்டப்பட வேண்டிய முடிவு.

அந்தக் கொலைக்கும் பில்லாவுக்கும் தொடர்பில்லை என்று சிம்போலிக் பண்ணுவது மிகத்துணிச்சலான இடம்.
– டைரக்டர் சபாஸ் வாங்கும் இடம்.

பில்லா உன் எண்ணங்கள் முடிந்துவிட்டதுதானே என்று நண்பன் கேட்பான்.. அப்போது பில்லா இது முடிவல்ல ஆரம்பம் என்பான்… மனம் ஓசையின்றி கரகோஷம் செய்கிறது.

முதலமைச்சர் ஒருவரை கொன்று பில்லாவின் தலையில் பழியை போட்டு, வெளிநாட்டவரிடமிருந்து பில்லாவை பயங்கரவாதியாக பிரிக்கிறான் உள்ளுர் அரசியல்வாதி..! மிகத்துணிச்சலான இடம்.

தமிழகத்தின் தென் கோடியில் வைரம் கடத்துவதில் உள்ள ஊழல்களில் ஆரம்பித்து, சென்னைக்கு தூள் கடத்தலுக்குள் போய் கடைசி, சர்வதேச ஆயுதம் கடத்தல் பேரம்வரை பில்லா உயர்கிறான்.

அவனுடைய துணிச்சலே அவன் வெற்றியின் இரகசியம்..

சர்வதேச ஆயுத ஊழலில் இன்ரபோல் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருப்பதைக் காண்கிறான், அந்த ஆயுத ஏற்றுமதியில் ஒரு தமிழன் சம்மந்தப்பட்டு இரகசிய தகவல் கொடுக்கிறான்…

துரோகி எங்கே இருந்தான் என்று வெளிச்சம் போடுகிறான் பில்லா..

ஆயுதக் கடத்தல் கூட்டத்தை அழித்து, தான் தூய்மையானவன் அநியாயமாக பட்டம் சுமத்தப்பட்டவன் என்பதை பதிவு செய்கிறான்.

இன்ரபோலில் தமது பெயர் வருமென அஞ்சுவதாக சொன்னவர்களிடமே தான் பயங்கரவாத செயல்களுக்கு எதிரானவன் என்பதை கிளைமாக்சில்; செய்து காட்டுகிறான் பில்லா டேவிட்.

ஆக, ஈழத் தமிழன் பயங்கரவாதத்திற்கு துணை போகும் ஒருவனல்ல, இந்திய அரசியல் தலைவர் கொலைக்கு அவன் பொறுப்பானவனுமல்ல.. உண்மையில் அவன் ஆயுதம் தூக்க மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருவன் என்பதை ஈழத்தில் சிங்களப் படைகள் வீசும் குண்டுகளின் மூலமே காட்டிவிடுகிறார் இயக்குனர்.

நீதியானவனும், உயிருக்கு அஞ்சாதவனுமான பில்லா இறுதியில் இறந்துவிடுகிறானா.. இல்லை அவன் விமானத்தில் நண்பனுடன் தப்பிடுவிகிறான் என்று கதையை முடிக்கும்போது ரசிகரை எங்கோ கொண்டு போய்விடுகிறது கதை.

உண்மையில் இந்தத் தயாரிப்பில் எந்த ஈழத் தமிழரும் தொடர்புபடாமல், எந்த ஈழ உணர்வாளரும் சம்மந்தப்படாமல் அனைத்து இந்திய அளவில் கலைஞர்கள் இந்தக் கதையை கொண்டு வந்திருப்பது.. தர்மத்தின் வெற்றியாகும்.

பில்லா – 2 மூலம் சொல்லப்பட்ட செய்தி சாதாரண செய்தியல்ல என்பது படம் முடிவடைய தெரியவருகிறது.

கிராபிக்ஸ், உண்மைத் தன்மை, நடிப்பு, காட்சியமைப்பு யாவுமே தத்ரூபமாக ஓர் ஆங்கிலப்படத்திற்கு இணையாக உள்ளன.

21 ம் நூற்றாண்டில் வந்த இந்திய தமிழ் வர்த்தகத் திரைப்படங்களில் நம்பர் வண் பில்லா 2.

டைரக்டருக்கு போன் செய்தோம் கிடைக்கவில்லை அதில் நடித்த முக்கிய நடிகர் ஒருவருக்கு எமது வாழ்த்துக்களை சொன்னோம்.

அவர் சொன்னார் உங்களுக்குத்தான் இந்தப் படத்தை உண்மையாக நல்ல படம் என்று கூறுவதற்கான துணிச்சல் இருக்கிறது என்று.

இயக்குநர், அஜித், மற்றய நடிகர்கள், எடிட்டர் அனைவர் கரங்களையும் கண்களில் ஒற்றி பாராட்டுகிறது மனது.

தமிழகத்தில் இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் துணிச்சல் மேலும் மலர வேண்டும்.. விலைக்கு வாங்கிய ஆஸ்கார் ரவிச்சந்திரன் பாரட்டுக்குரியவர்.

பில்லா – 2 சரித்திரம் படைக்கும் என்பது அதன் ஓட்டத்தில் தெரிகிறது.

ஒவ்வொரு தமிழனும் தவறாது பார்க்க வேண்டிய தரமான வர்த்தகத் திரைப்படம்.

ரஜினிக்கு பின் அஜித்தே தமிழகத்தின் சூப்பர்ஸ்டார் என்பதில் இனி யோசிக்க எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஜெயிச்சால் போராளி தோற்றால் தீவிரவாதி – இது பில்லாவின் பஞ்ச் டயலக்.

அலைகள்.

0 Responses to ஒவ்வொரு தமிழனுக்கும் பார்க்கப் பார்க்க பெருமை தரும் திரைப்படம் "பில்லா 2"

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com