Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனியில் தமிழீழ இறைமைக்கான மாநாடு இரு பகுதிகளாக சென்ற கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி மற்றும் மே மாதம் 14 ஆம் திகதி ஆகிய தினங்களில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய அமைப்புகளால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டில் ஈழத்தமிழர் தமக்கான சுதந்திரம் உள்ள ஒரு நாட்டை நிறுவ வேண்டியதற்கான அவசியத்தை ஆழமாக இளையோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அத்தோடு மாநாட்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிவந்த இறைமை மற்றும் அவர்கள் போராடிப்பெற்ற இறைமை ஆகியவற்றுடன்,அவர்களை அழிவில் இருந்து காக்க வழங்கப்படவேண்டிய இறைமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு,சர்வதேச நாடுகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசின் திட்டமிட்ட இனவழிப்பினை உடனடியாக நிறுத்துவதற்கு ஈழத்தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்க வேண்டும் என இளையோர் அமைப்பை சார்ந்த கிருஷாந்தி பாலசுப்ரமணியம் விளக்கினார்.

இம்மாநாட்டின் போது 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் 1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவு விடையமாக வரலாற்று ரீதியான சம்பவங்களை ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக செல்வன் கோகுலன் ஆராய்ந்து, மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு எடுத்துரைத்ததோடு, அதற்கான தமது மீள் ஆதரவை இவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு பேச்சாளர்களாக மனிதவுரிமையாளர்கள் ஆகிய சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமன் தலைவர் விராஜ் மென்டிஸ் மற்றும் மதகுரு அல்பேர்ட் கோலன் அவர்கள் கலந்துகொண்டனர்.

விராஜ் மென்டிஸ் அவர்கள் தனது உரையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இனவழிப்பு விடையமாகவும் அத்தோடு தமிழர்கள் தமது சுதந்திர போராட்டத்தின் ஊடாக சமாதான காலத்தில் தமக்கான தமிழீழ நிழல் அரசாங்கத்தை உருவாக்கினார்கள். ஆனால் அதை விரும்பாத புவிசார் அரசியல் நலம் கருதி செயற்படும் வல்லரசு நாடுகளின் திட்டமிட்ட சமாதான முயற்சியை முறியடிக்கும் செயல்களால் ஈழத்தமிழர்கள் இனவழிப்புக்கு தொடர்ந்து முகம் கொடுக்கின்றனர் என கூறினார்.

அத்தோடு தமிழர்கள் எப்படி தமது நம்பிக்கையில் தாயகத்தில் நேர்த்தியான தமது சுதந்திர போராட்டத்தை நடாத்தினார்களோ அதேபோல் புலம்பெயர் மக்களும் யாரும் வந்து தம்மை காப்பார்கள் என்று நம்பாமல் தமது நம்பிக்கையில் தாயகத்தின் உறுதியோடு செயற்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

மதகுரு அல்பேர்ட் கோலன் தனது உரையில், புலம்பெயர் தமிழீழ இளையோர்கள் தன்னம்பிக்கையோடும் தமிழின பெருமையுடனும் தமது இன அடையாளங்களை பேண வேண்டும் என்றும் தமது நோக்கத்தில் இறுதி வரை உறுதி தளராமல் செயற்பட வேண்டும் என்றும் இளையோர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

இரண்டாவது நிகழ்வாக நடைபெற்ற மாநாட்டில் மீண்டும் சுயநிர்ணய உரிமை பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் அத்தோடு தமிழீழ விடுதலைப் பாதையில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் செல்வன் விபிஷணன் ராயசிங்கம் எடுத்துரைத்தார்.

நடைபெற்ற மாநாடு இரண்டு அமர்வுகளாக கொண்டு அதை தொடர்ந்து இணையவழி ஊடாக பல கலந்துரையாடலை நிறைவுசெய்து பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டை இளையோர்கள் முன்னிட்டு நடாத்தியது குறிப்பிடத்தக்கது.

1. ஈழத்தமிழரின் இன அடையாளம் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து மட்டங்களிலும் உருவாக்குவது யேர்மன் நாட்டின் நீரோட்டத்தில் எமது வாழ்வுக்கும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள தாயகத் தமிழரின் இறைமைக்கும் இன்றியமையாதது.

2. தமிழர் இறைமைக்கான அங்கீகாரத்துடன் கூடிய தீர்வே இலங்கைத் தீவில் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்பதுடன் 1976இல் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், 1985இல் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முடிவுகளையும், 2009இல் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு தீர்மானத்தையும் வரவேற்கின்றோம்.

3. உலகின் நீதியற்ற தன்மையே ஈழத்தமிழர் மீதான இனவழிப்புக்குத் துணைபோனது. இதுவே சிறிலங்காவின் குற்றம் புரிந்தோருக்கு துணைநின்று சலுகைகளை வழங்குகின்றது. இதனை வெளிக்கொணர்வது இருதரப்புச் சமநிலையை உருவாக்கும்.

4. நீண்ட காலமாக பல்வேறு வகையான திட்டமிட்ட குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு, மொழித்திணிப்பு ஆகியவற்றுக்கு முகங்கொடுத்துவரும் ஈழத்தமிழர்கள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ள நிலையில், சிறிலங்காவின் உள்ளக மட்டத்தில் மட்டும் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது இயலாத விடயம் என்பதுடன் அத்தீர்வானது ஆக்கபூர்வமாக அமையாது.

5. மாவீரர்கள், விடுதலைக்கான உயிர்த்தியாகங்கள், அரசியல், கலாசார அடையாளங்கள், தமிழீழ தேசியக் கொடி, தேசிய விழாக்கள், போன்றவற்றை புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் செல்வதுடன் அனைத்து வழிகளிலும் மாவீரர்கள் செயல்களை எடுத்துச் செல்வது.

6. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காவின் மேலாண்மையை எதிர்ப்பதுடன் அரசியல் மற்றும் கலாசார ரீதியில் ஈழத்தமிழர் மீது திணிக்கப்படும் சிறிலங்கா தேசியத்தையும் எதிர்க்கின்றோம்.

7. தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய உரிமைகளை விட்டுக்கொடுத்து சிறிலங்காவின் ஒன்றையாட்சியை ஏற்கும் எந்தவொரு புலம்பெயர் அமைப்பையும் நாம் புறக்கணிக்கின்றோம்

8. தமிழர் இறைமைக்காக தமிழ்நாடு, தமிழீழம், புலம்பெயர்நாடுகள் ஆகியவற்றிலுள்ள தமிழர் தலைவர்களை சர்வதேசத்தின் தமிழர் தன்னாட்சி உரிமை மீதான பார்வையை மாற்றியமைக்கக் குரல்கொடுக்கும்படி வேண்டுவதோடு, ஆக்கிரமிப்புக்குள் வாழும் மக்களுடனான ஒற்றுமையைக் கட்டியெழுப்பி புவிசார் அரசியல் நிலையை எமக்குச் சாதகமாக மாற்றியமைக்குமாறும் வேண்டுகின்றோம்.

9. தொடரும் தமிழர் மீதான இனவழிப்பு பற்றிய விழிப்புணர்வை வேற்றின மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுடன், சர்வதேசத்துக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பான தெளிந்த பார்வையை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

10. ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்படும் ,அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கலாசார வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கும் அரச அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கும் எவ்வித நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

0 Responses to யேர்மனியில் நடைபெற்ற தமிழீழ இறைமைக்கான மாநாடு: யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com