Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவம் சாமத்தியச் சடங்கு தொடங்கிச் சாவீடு வரைக்கும் இன்று பிரசன்னமாகிக் கொண்டிருக்கிறது. இராணுவத்தைச் சிவில் நடவடிக்கைகளில் வலிந்து இழுக்கும் வரலாற்றுத் தவறைச் செய்யாதீர்கள் வவுனியா மாவட்டப் பிரதி விவசாயப் பணிமனை வளாகத்தில் அன்னாசிப் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வயல் விழா நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் ஹிலா பானு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

வடமாகாண சபையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கண்டுவிட்டதாக உலகத்துக்குக் காண்பிக்க முயலும் அரசு மறுபுறம், மாகாண சபையின் ஊடாக நாம் எமது மக்களுக்குச் செய்யக் கூடிய குறைந்த பட்ச பணிகளைக் கூட செய்யவிடமால் தடுக்கிறது. எமது அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால் மாத்திரமே இந்தத் தலையீடுகளை இல்லாமல் செய்யலாம். அப்போதுதான் எமது விவசாயப் பொருளாதாரத்தை எமக்கேற்றவாறு நாம் மேம்படுத்த முடியும்.

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். மாவட்டங்களின் விவசாய விரிவாக்கத்துக்கெனப் பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் இருக்கும்போது, இவர்களுக்கு மேலதிகமாக மாவட்டச் செயலகங்களில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்களை மத்திய அரசு நியமித்து வைத்திருக்கிறது. இது வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயற்பாட்டு உரிமைகளைப் பறிக்கும் மாகாண நிர்வாகத்துக்கு இடையூறு செய்யும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

அன்னாசிப்பழம் தென் இலங்கையில்தான் விளையும் என்னும் நிலைமாறி, இப்போது வவுனியாவிலும் விளைவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அதிகளவில் அன்னாசி பயிரிடப்படும் கம்பஹா, குருநாகல், பகுதிகளில் விளையும் அன்னாசிப் பழங்களைவிட வவுனியாவில் விளைந்துள்ள பழங்கள் இனிப்புச் சுவை கூடுதலாக உள்ளன. பளை, இயக்கச்சி போன்ற பிரதேசங்கள் தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக அதிக அளவில் அன்னாசியை வளர்ப்பதற்கான வாய்ப்பான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் இவ்வாறு விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கென எத்தனையே வாய்ப்புகள் இருந்தபோதும் மத்திய அரச நிர்வாகம் ஒத்துழைப்பதாக இல்லை. மத்திய அரசு பாதீனியத்தை ஒழிப்பதற்கென யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள விவசாயப் பணிப்பாளருக்கு 3 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது. அண்மையில் மாகாண விவசாய அமைச்சும் பார்த்தீனியத்தை அழிப்பதற்குப் 15 நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. எங்களிடம் பணம் இல்லை. பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களையும், யுவதிகளையும் பயன்படுத்தி, உலக உணவுத் திட்டம் வழங்கிய அரிசியையும் பருப்பையும் அவர்களுக்கு ஊதியமாக வழங்கியே இந்தத் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.

பாதீனியம் ஒழித்தல் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு எங்களுடன் இணைந்து செயற்படுமாறு மாவட்ட விவசாயப் பணிப்பாளரை நான் கோரியபோது, இராணுவத்தினரைப் பயன்படுத்தியே தாங்கள் பாதீனியம் ஒழிப்பில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார். இராணுவம் சாமத்தியச் சடங்கு தொடங்கிச் சாவீடு வரைக்கும் இன்று பிரசன்னமாகிக் கொண்டிருக்கிறது. இராணுவத்தைச் சிவில் நடவடிக்கைகளில் வலிந்து இழுக்கும் வரலாற்றுத் தவறைச் செய்யாதீர்கள் என்று அவரிடம் நான் தெரிவித்தேன். இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்தான்.- என்றார்.

0 Responses to அரசியல் தீர்வே இராணுவ தலையீட்டை இல்லாமல் செய்யும்! பொ.ஐங்கரநேசன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com