Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டு, அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டிருக்கும் கைதிகளின் கோப்புகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தில் இன்று முக்கிய திருப்புமுனை ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சிறைவைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்கள் அடங்கிய அறிக்கை என்று சட்டமா அதிபரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

இதேவேளை சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர், பிரதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கூடி ஆராய்ந்து கைதிகளின் விடுதலைக்காக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிக்கையையடுத்தே ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த தீர்மானத்தினை அறிவிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். அந்த வகையில் தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து திருப்திகரமான பதில் கிட்டுமென தமிழ் அரசியல் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அதேவேளை, இன்றைய தினம் 11 பேரை பிணையில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்பத்தாருக்கும் அது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

ஏற்கனவே விடுவிப்பதாக கூறப்பட்டிருந்த 31 பேருள் 24 பேர் பிணையில் விடுதலையாகி தமது உறவுகளுடன் இணைந்துள்ளனர். எஞ்சியவர்களுள் நால்வருக்கு வேறு வழக்குகள் இருப்பதனால் அவர்கள் குறித்து தொடர்ந்த ஆராயப்பட்டு வருகிறது.

மிகுதி மூவரும் மேலும் எண்மர் அடங்கிய ஒரு தொகுதியுமாக 11 பேரே இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்படவிருப் பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

எஞ்சியோரின் விடுதலை குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவும் சட்டமா அதிபர் திணைக்களமும் மீளாய்வு செய்து வரும் நிலையில் இவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவரென்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்; பிரதமர் தலைமையில் இன்றும் ஆராய்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com