Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லிணக்க அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணிகளை எதிர்வரும் ஜனவரியில் விடுவித்து தருவதாக ஜனாதிபதியும், பிரதமரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாது போனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான முன்னெடுத்த அதே போராட்டத்தை இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் முன்னெடுக்க வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு காணியுடன், காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அந்த காணிகளில் தமது வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிக்க முடியுமாயுள்ள போதே அந்த மக்களால் காணியை பெற்றுக் கொண்டதற்கான முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்றும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளாலேயே இந்த அரசாங்கம் பதவியேற்றது. எனவே ஜனாதிபதி தேர்தலின் போதும், அதற்கு முன்பும் பின்பும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு - செலவு திட்டத்தின் காணி, மகாவலி அபிவிருத்தி, சற்றாடல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ், முஸ்லிம் மக்கள் வீடு, காணியின்றி தமது வாழ்வாதாரங்களை தொலைத்து நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இராணுவத்தினர் அந்த காணிகளை ஆக்கிரமித்து விடுதிகளை கட்டி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து 11 அகதி முகாம்களிலும் நண்பகர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சுமார் 25 வருடங்களாக இவர்கள் தமது சொந்த மண்ணில் குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர். இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தால் தான் அம்மக்கள் தமது சொந்த காணிகளில் குடியேறி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியும்.

வடக்கில் இராணுவத்தினரை குவித்து இராணுவ மயமாக்கி, பின்னர் சிங்கள மயமாக்கி, பெளத்த விகாரைகளை அமைப்பதே மஹிந்த சிந்தனையின் கோட்பாடாக இருந்தது. இதற்கு எதிராக நாம் போராடியதன் விளைவாகவே ஜனவரி 08ஆம் திகதி புதிய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவினோம். சிறுபான்மையினரின் தேவை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டால் நாம் போராட பின்வாங்கமாட்டோம்.

சிறைக் கைதிகளை விடுவிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்ற பொதுவான கருத்து இருந்து வருகிறது. எனவே, கால இழுத்தடிப்பை மேற்கொள்ளாது சட்டமா அதிபர் திணைக்களம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒத்துழைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வாக்குறுதிகளை மீறினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com