தனது இலங்கை விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மாத்திரம் பேச்சு நடத்தவுள்ளதாக இலங்கை வந்துள்ள யப்பானின் விசேட பிரதிநிதி யசுசி அகாசி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வேறு எந்தக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தெரிவித்த அவர், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது நாட்டில் இல்லாத காரணத்தினால் அக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே யசூசி அகாசி மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்துக் கூறிய அவர், சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது எந்தவொரு அழுத்தத்தினையும் பிரயோகிக்கக் கூடாது என்றும் எடுத்துரைத்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்காக யப்பான் அரசாங்கம் 39 பில்லியன் ஜென்களை நிதியுதவி செய்யவுள்ளது. அத்துடன் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்வினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் அகாசி தனது வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகாசி யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது யப்பானின் நிதியுதவியுடன் மீள்குடியேற்றம் குறித்த திட்டங்களின் முன்னேற்றங்களை நேரடியாகச் சென்று பார்வையிடுவார் என்றும் தெரியவருகின்றது.



0 Responses to கூட்டமைப்புடன் மாத்திரம் பேச்சு நடத்தப்படும்: அகாசி