நல்லிணக்க ஆணைக்குழுவின் பூசா அமர்வின் போது ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிவித்தலுக்கேற்ப, அதன் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லையிடம் ஊடகவியலாளர்கள் பலர் தொடர்பு கொண்டு அனுமதியைப் பெற்றிருந்தனர்.
அதன் பிரகாரம் இன்று காலை சுமார் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பூசா முகாமைச் சென்றடைந்திருந்ததுடன், ஆரம்பத்தில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமாவதற்கு சற்று முன் ஊடகவியலாளர்களிடம் வந்த பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி அவர்களுக்கு செய்தி சேகரிக்க இடமளிக்க முடியாதென அறிவித்தனர். ஊடகவியலாளர்கள் அங்கு வந்து அதற்குள் இரண்டு மணி நேரங்கள் மட்டில் கழிந்து போயிருந்தது.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம் என்பதால் அதன் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை இறுக்கமாகப் பேண வேண்டியுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகவியலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து அமர்வுகளுக்கும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி இத்துடன் பல தடவைகள் மீறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to பூசாவிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்