Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சனல் 4வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்” என்ற காணொளி தொடர்பில் நாள் சென்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆவணப்படம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நெசர்கி, பொது செயலாளர் பான் கீ மூன் இன்னும் இந்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எனினும் அந்த படத்தின் உட்பொருள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நெசர்கி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த பான் கீ மூன், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சபையின் பணியாளர்கள் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதையும், இரண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையையும், சனல் 4 ஆவணப்படம் வெளிக்காட்டி இருந்தது.

சரணடைந்த இரண்டு தமிழீழ விடுதலைப்புலி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பான் கீ மூனும், ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் உறுதி அளித்திருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

போரின் போது ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் நடவடிக்கைகள், பான் கீ மூன் இந்த கருத்தை வெளியிட்டு 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பில் இதுவரையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபைகளின் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இன்றைய தினம் மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 21ம் திகதி பொது சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அதற்கு முன்னர் இந்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காட்சிப்படுத்தப்படலாம் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐ.நா. நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பாரா அல்லது ஏற்றுக் கொள்வாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப் படுமாக இருந்தால், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நெசர்கி குறிப்பிட்டார்.



0 Responses to ஐ.நா சபையில் "இலங்கையின் கொலைக்களம்": இன்னர் சிற்றி பிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com