Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் திடீர் என தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதை போல இன்று நடந்து கொள்கிறது. ஆனால் மலையாளிகளும்,மலையாள அரசில்யல்வாதிகளும் கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக மிகப்பெரிய துரோக வரலாற்றை படிப்படியாக செய்து வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் முதல்பெரும் வரலாற்று தவறு அணை கட்டி முடிக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட போதே தொடங்குகிறது.

1895 அக்டோபர் 10 ம் தேதி அணை திறக்கப்பட்டது. தமிழகத்தில் மலை மறைவு பகுதிகளாக இருந்த இன்றைய தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நம்பிக்கையின் கீற்று விதைக்கப்பட்டது. அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட திருவாங்கூர் அரசின் எல்லை பெரியாறு அணை கட்டிய இடத்திலிருந்து 62 கி.மீ தொலைவில் உள்ள அடூர் கிராமத்தில் முடிகிறது. சமஸ்தானத்தின் எல்லைக்குள் இந்த அணை இருப்பதாகக் கற்பனை செய்து இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. அணைவிரகாரத்தில் நடந்த முதல் வரலாற்று தவறு இது.

இந்திய சுகந்திரத்திற்கு பிறகு 1956ல் மொழிவாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. தமிழக, கேரள எல்லைப்பிரச்சனை உருவானது. பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் 90 சதம் தமிழர்கள் வசித்தனர். பெரியாறு அணை இந்த இரு தாலுகாக்களில்தான் இருக்கிறது.எந்த மொழி பேசும் மக்கள் ஒரு பகுதியில் அதிகம் வசிக்கிறார்களோ அந்த பகுதியியை சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் சேர்ப்பதுதான் விதி. ஆனால் அப்போழுதே பெரியாறு அணையைக் கருத்தில் கொண்டு இந்த இரு தாலுகாக்களையும் விட்டுத்தர மறுத்தது கேரளம். பீர்மேடு, தேவிகுளம் இல்லாத கேரளம் தலையில்லாத முண்டம் போலாகிவிடும் என இந்தியாவின் அன்றைய பிரதமர் நேரு கேரளாவுக்கு வக்காலத்து வாங்கினார். அதற்கு வாய்மூடிப் பணிந்து போனார் காமராஜர்.

அடுத்து 1976 கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. அதன் உயரம் 555 அடி, அதன் நீர்த்தேக்கப் பரப்பு 16,000 ஏக்கர், பெரியாறு அணையைப்போல 7 மடங்கு பெரியது. இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து இது வரை முழுமையாக நீர் நிரப்பப்பப் படவேயில்லை. அதிலிருந்து 8000 மேகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவர்களின் எந்திரங்கள் தூசுபடிந்தன.அதனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து அந்த நீரை அப்படியே இடுக்கிக்கு எடுத்து வந்தால் அணை ஒரளவு நிறையும் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது கேரள அரசின் அன்றைய திட்டம்.

அந்த வேளையில் கேரளத்தின் முக்கிய ஊடகமான மலையாள மனோரமா இரண்டு மாதங்களில் அணை உடையப்போவதாக செய்து வெளியிட்டது. பீர்மேடு எம்.எல்.ஏ. அணை பலவீனமாகிவிட்டதாக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது எம்.கே.பரமேஸ்வரன் நாயர் வெளிப்படையாகவே கூறினார், நம் சகோதரர் எம்.ஜி.ஆரிடம் சொன்னால் உடன் அணையின் நீர்மட்டத்தை குறைத்துவிடுவார் என்று.

இந்த திட்டத்தின் படி 25.11.1979 ல் தமிழக,கேரள அதிகாரிகள் அமைச்சர்கள் அளவில் திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டவர்களில் முதல்வர் எம்.ஜி.ஆரிலிருந்து, அன்றைய மதுரை மாவட்ட கலெக்டர் மக்கரா வரை அணைவரும் மலையாளிகள், பேச்சுவாத்தை மலையாளத்திலேயே நடைபெற்றதாம். இந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரு தமிழர் பொதுபணித்துறை அமைச்சர் ராஜாமுகமது மட்டுமே, அவர் தமிழர்களுக்கு எதிரான அணை நீர்மட்டத்தை குறைப்பதை கண்டித்து பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆனாலும் எம்.ஜி.ஆர் தலைமையிலான மலையாளிகள் குழு அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பது, அணையை பலப்படுத்தியதும் மீண்டும் பழைய நிலைக்கே உயர்த்தலாம் என ஒப்பந்தம் செய்து கொண்டது. அணை பலமுறை பலப்படுத்தபட்டும் இது வரை நீர்மட்ட உயரம் , அன்று குறைக்கப்பட்ட 136 அடியில் தான் உள்ளது.

1954ல் ராஜபாளையத்தில் தமிழக வனத்தறை, செண்பகவல்லி அணையைக் கட்டியது. இடுக்கி அணைக்குத் தண்ணீர் இல்லை என்பதால் கேரள வனத்தறையினர் 1981ல் தமிழகத்திற்குள் நுழைந்து செண்பகவல்லி அணையைத் தகர்த்து எறிந்தனர். உடைத்தவர்களிடமே தமிழக அரசு ரூ.5 லட்சத்தை வழங்கிக் கட்டித்தரும்படி மன்றாடியது. இன்று வரை அணை கட்டப்படவில்லை.



இவை போக இதுவரை கேரள ஊடகங்களும், அரசியில்வாதிகளும் அவிழ்த்துவிட்ட பொய்கள் ஏராளம்....

1980களில் அணையில் யாணைஅளவுக்கு ஒட்டை இருக்கிறது என்றார்கள்.

அணையின் நீர்த்தேக்கத்தை உயர்த்தினால் யாணை, புலிகள், மான்கள் நீர்குடிக்க இயலாது என்றார்கள்.

அணை உடைந்தால் கேரளவில் 5 மாவட்டங்கள் இல்லாமல் போகும் எனும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், கேரளாவின் வரைபடத்தில் 5 மாவட்டங்களை நீக்கி இணையத்தில் வரைபடத்தை வெளியிட்டார்கள்.

8 ஆண்டுகள் நடந்த கடும் நீதிமன்ற வழக்கிகளுக்குப் பின் 27.2.2006 ல் இந்திய உச்சநீதமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது. பெரியாறுஅணை முழுபலத்துடன் இருப்பதால் மீண்டும் 142 அடி வரை தமிழகம் அதில் தண்ணீரைத் தேக்கலாம் என்பதே அந்த தீர்பின் சாரம். அந்த தீர்ப்பு வெளிவந்த 10 நாட்களில் கேரள அரசு உடனே கேரளத்தில் உள்ள மிக ஆபத்தான அணைகள் தொடர்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

தீர்ப்பு வெளியாகி கடந்த ஆறு ஆண்டுகளாகியும் தீர்ப்பை நிறைவேற்ற வைக்கும் எந்த முயற்சியையும் தமிழக அரசும், அதன் ஆட்சியாளர்களும் செய்யவில்லை என்பது மிக பெரிய கூத்து. குறைந்தபட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட போடவில்லை. மேலும் 2009ல் தமிக அரசு ஏன் மீண்டும் கேரளா போட்ட வழக்கிற்கு ஒப்புதல் அளித்தது என்பது போன்ற கேள்விகள், தமிழர்களை மலையாளிகள் மட்டுமல்ல தமிழர்களும் ஏமாற்றுகிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.

இன்றைக்கு கேரளத்தின் உணவுத்தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்பவர்கள் தமிழர்களே. உணவு மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் மலையாள மொழியின் எழுத்தும், தமிழின் மூத்த எழுத்துவடிவமான வட்டெழுத்தாகும்,அவர்கள் பேசுகிற மொழி கொடுந்தமிழ் என்று சொல்லப்படுகிற தமிழின் பழைமையான பேச்சு வடிவம், இன்றைய கேரளமே பண்டைய தமிழகத்தின் சேரநாடு , இப்படி எல்லாவிதத்திலும் தமிழகத்திலிருந்து எடுத்துக்கொண்ட மலையாளிகள், அடுத்தவனைக்கெடுத்த தான் வாழ நினைக்காத தமிழரின் பரந்த மனப்பாண்மையையும் எடுத்துக்கொள்ளவில்லையே.



"இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுவை தான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திடவேண்டும். இதை தள்ளிவைப்பதோ,தவிர்பதற்கோ இடம் இல்லை, ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவது இல்லை.." முல்லைபெரியாறு அணை கட்டும் போது ஏற்பட்ட துன்ப, துயரங்களின் போது, அந்த அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் டைரிக்குறிப்பில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. இதனை மலையாளிகளுக்கு யாரேனும் மொழிபெயர்த்துச் சொன்னால், புரிந்து கொள்வார்களா..?

தமிழ்மீடி - அ.தமிழ்ச்செல்வன்

0 Responses to முல்லைப்பெரியாறு - துரோகங்களின் தொடர்ச்சி:சில வரலாற்றுக் குறிப்புக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com