இன்றிரவு பிரிட்டன் நேரம் 10.55 ற்கு சனல் – 4 தனது கொலைக்களம் – 2 ஐ உலகத்தின் முன் வைக்கப்போகிறது. அதில் என்ன இருக்கும்.. பல விடயங்கள் கசிந்துள்ளன.. அதைப்பார்த்தால் என்ன வரப்போகிறது என்பது தெரிகிறது..
சனல் – 4 ல் வெளிவரப்போகும் விடயங்கள் வாடைக்காற்று வந்தது போல செவிவழி செய்திகளாக வந்து போய் நீண்ட காலமாகிவிட்டது. ஆனால் இப்போது நிபுணர்களும், காணொளிகளும் இணைந்து மறுபடியும் போர்க்குற்ற விசாரணைக்கான ஆவணமாக, கண்களுக்கு ஒளிப்படமாக வருகிறது. முன்னர் ஒலியில் வந்தது இப்போது ஒளியில் வருகிறது..
இதை சரியான போர்க்குற்ற ஆவணமாக பாவித்து, குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான அடுத்த கட்ட வேலைகளை செய்யப் போகிறோமா..? இல்லை இது உண்மையா பொய்யா என்ற ஆய்வில் இறங்கி குற்றவாளிகளை மீண்டும் தப்பிப் போக விடப்போகிறோமா..? இதுதான் இப்போதுள்ள கேள்வி.
சிலுசிலுப்பு பெரிதல்ல பணிகாரம்தான் பெரிது என்று சொல்லுவார்கள். எண்ணெய்ச் சட்டியில் பணிகாரத்தைப் போட்டவுடன் வரும் சிலுசிலுப்புக்கு பயந்து பணிகாரத்தை கருக விட்டவன் கதையாகிவிடக்கூடாது நமது செயல்கள்.
அதிகமாக கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது, கிளைமாக்ஸ் நிகழ்வாக வெளியூர் சின்ன மேளம் வரும். பக்தர்கள் அதைப் பார்த்து மயங்கி, திருவிழாவில் வீதி வலம் வரவேண்டிய சாமியையும், தாம் எதற்காக அங்கு வந்திருப்போம் என்பதையும் மறந்து சின்னமேளத்திற்கே வந்ததாக நினைத்து கிறுகிவிடுவதுண்டு.
அந்த நேரத்தில் ஆலய மணியை அடித்து நடப்பது திருவிழா.. சின்னமேளம் அல்ல என்று பக்தர்களுக்கு உணர்த்துவார் கோயில் மணியகாரர். அதன் பிறகு பக்தர்கள் தமது மன அழுக்குகளை மறைக்க கவர்ச்சி நடனக்காரி மீது மண்ணள்ளிக் கொட்டிவிட்டு, பக்தர்களாகி கோயிலுக்குள் ஓடுவார்கள்.
அதுபோலத்தான் ஜெனீவாவில் கொடியேறி மனித உரிமைத் திருவிழா நடைபெற அதன் கிளைமாக்சாக சனல் – 4 வந்துள்ளது. இப்போது பக்தர்கள் ஜெனீவாவை மறந்து இன்றிரவு சனல் – 4 ஐ பார்க்கப் போகிறார்கள். ஏறத்தாழ அனைவருமே இப்போது ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை தீர மறந்துவிட்டார்கள்.
இனி மணியடித்து அவர்களை ஜெனீவாவில் கொடி இறக்கும் நிகழ்வுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இருப்பினும் சனல் – 4 ல் சில நல்ல விடயங்கள் உண்டு.
01. ஜெனீவா பிரேரணையின் பின்னர் மறுபடியும் யூலைக்கலவரம் போன்ற கலவரத்தை நடாத்தி வெறியாட்டம் நடத்த இருந்த சிங்கள இனவாதம் தன்னுடைய வெட்கக்கேடான செயலைப் பார்த்து, சிறிது அடங்கியிருக்க வாய்ப்புள்ளது.
02. வன்னியில் நடைபெற்ற நிகழ்வுகளின் கதாநாயகனான இந்தியா ஜெனீவாவில் சிறீலங்காவை ஆதரித்துவிட்டு மறுபடியும் இந்தியா திரும்ப முடியாத அவலமான நிலை உருவாகும். உலகம் முழுவதும் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம் முதற்தடவையாக இந்திய மக்களிடம் தோல்வியடையப் போகிறது.
03. இப்படிப்பட்ட செயல்களை செய்த மோசமான சிங்கள இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற போராட்டங்கள் ஆரம்பமாகும். அதுதான் நேற்றே பலாலியின் ஓடு பாதையை சுற்றி வேலி போட ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கள இராணுவத்தால் இனி வடக்கின் வசந்தத்தை ஏற்படுத்த முடியாது என்பதை சனல் – 4 முத்திரை குத்தப் போகிறது.
இப்படி மூன்று நன்மையான பக்கங்களை நோக்கி சனல் – 4 ஆவணப்படத்தை ஆயுதமாக பயன்படுத்தி, தமிழ் சமுதாயம் அறிவியல் விழிப்பு பெற வேண்டும். எப்பொழுதுமே நமக்கு வாய்ப்பான பக்கத்தில் சிந்திக்க வேண்டும்.
இனி – சனல் – 4 வேடிக்கைகள்.
கலைஞர் மு. கருணாநிதி இப்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசி வருவதை தமிழினம் அவதானிக்க வேண்டும். சனல் – 4ல் நடைபெற்ற கொலைக்களத்தை இந்தியா முன்னின்று நடாத்தியபோது உண்ணாவிரத நாடகமாடியவர். 2 ஜி பணத்தை கொடுத்து தன்னை வாய்திறக்க விடாது தடுத்துவிட்டார்களே என்று புழுங்கியவர். இப்போது சனல் 4 நேரடியாக தன்னை நோக்கி கேள்விகளை கிளப்பப் போகிறது என்பதை அறிந்து அடுத்த நாடகத்தை ஆரம்பித்துள்ளார்.
சனல் – 4 ஐ வைத்து சீமான் அடுத்த தேர்தலில் காங்கிரசை வேரோடு தமிழகத்தில் தோற்கடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தமிழ்நாடு காங்கிரஸ் ஞானதேசிகனும் போலியாக ஓர் உணர்வலையை பதிவு செய்துள்ளார்.
ஜெயலலிதா இரண்டாவது தடவையும் ஆதரிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியுள்ளார். அவருடைய கடிதமும் மு. கருணாநிதியின் கடிதம் போல தமிழக மக்களின் காதில் பூ சுற்ற அனுப்பப்பட்ட கடிதம் என்பது மன்மோகன் சிங்கின் பதிலால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் சிங்கள ஆட்சியாளரை ஆதரிக்கப் போகிறோமா இல்லையா என்ற இருவருடைய கேள்விக்கும் உரிய பதில் கொடுக்காமல் போர்க் குற்றங்களை விசாரிப்பதை விரும்புகிறோம் என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். ஆடியிலே காற்றடிக்குமா என்று கேள்வி கேட்க அமாவாசசையில் வெளிச்சம் வரும் என்று பதில் கொடுத்திருக்கிறார். ஆகவேதான் மூவருடைய கடிதங்களும் கொத்தாக தமிழரின் காதில் பூ தொங்கவிடும் வேலையென்று துணிந்து சொல்ல வேண்டியிருக்கிறது.
அப்படியென்றால் அவர்களுடைய ஆதரவை நாம் புறந்தள்ளுவதா..? இல்லை அவர்கள் இப்போதாவது ஒன்று பட்டு, ஆதரிப்பது நல்லது, பாராட்டுக்குரியது. ஆனால் ஒரு கேள்வி..
எல்லாம் முடிந்தபிறகு ஒன்றுபட்டிருக்கிறார்கள்… இதற்குப் பெயர் ஆதரவல்ல சுடலை ஞானம்.
சரி..
இவர்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பது யார்..?
அமெரிக்காவின் அரை வேக்காட்டு ஜெனீவா தீர்மானமும், சனல் 4 கொலைக்களமும்தான்.
இன்று அம்பலமாகும் உண்மைகளை ஏதோ மன்மோகன் சிங் அறியாதவர், ஜெயலலிதாவும், கலைஞரும் தெரியாதவர்கள் என்று கருதுவது மடமை. போர்க் குற்றம் நடந்திருப்பது அவர்களுக்கு தெரியும். அதை செய்யும்படி சொன்னதும் இந்தியாதான். அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணை உண்மையில் சிறீலங்காவுக்கு எதிரானதல்ல இந்தியாவுக்கு எதிரானது.. இதை இன்னமும் யாரும் வெளிப்படையாக உணரவில்லை. இதுதான் பாராளுமன்றில் மன்மோகன் காத்த மௌனத்தின் பொருள்.
இப்படியான பிரேரணைகளை இந்தியா மரபு ரீதியாக ஆதரிப்பதில்லை ஆகவே ஜெனீவாவிலும் அமெரிக்க பிரேரணையை நாம் ஆதரிக்கப் போவதில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அடடா எவ்வளவு பெரிய புத்திசாலி என்று பலர் மயங்க இடமுண்டு.
பாகிஸ்தான் மும்பையில் செய்த குண்டு வெடிப்பிற்காக ஜெனீவாவில் ஒரு போர்க்குற்ற பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்தால், நாம் மரபுப்படி அதை ஆதரிப்பதில்லையென்று பிரணாப் முகர்ஜி இதுபோல இந்திய பாராளுமன்றத்தில் அதற்கும் பதில் சொல்லுவாரா.. ?
இப்படியொரு கேள்வியை கேட்டால் முகர்ஜியின் பதிலில் மயங்கியோர்க்கு பதில் கிடைக்கும்.
மறுபுறம்..
இப்படியொரு அவலம் நடந்துள்ளது.. தமிழர் கூட்டமைப்பு ஜெனீவா போகாமல்.. தம்முடைய குற்றத்தை சுட்டிக்காட்டுவோர் துரோகிகள் என்று கூறியிருக்கிறது.
அக, புற காரணங்களால் போகாமல் நிற்கிறோம் என்கிறார் மாவை. அகம் என்றால் சிறீலங்கா புறம் என்றால் இந்தியா.. இந்த இருவருமே சனல் – 4 ன் கொடுமைகளின் தயாரிப்பாளரும் இயக்குநரும்தான். போயும் போயும் இவர்களுக்காக போகாமல் நின்றுவிட்டு மற்றவர்களை நோக்கி துரோகிகள் என்று விரல் நீட்டுவது சரியா..? எவ்வளவு காலம் துரோகிப்பட்டம் கட்டி வண்டியோட்டப் போகிறீர்கள்…
அதேவேளை நெடுமாறன், வை. கோபாலசாமி போன்றவர்களின் அரசியலும் தமிழகத்தில் சில எதிர்வுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் நாம் குருடர்களாக இருக்கக் கூடாது சகல பக்கங்களிலும் ஒளியடித்து பார்க்க வேண்டும்.
நிறைவாக..
இன்று வெளியாகும் சனல் 4 காணொளியை உணர்ச்சியுடன் பார்த்தல் கூடாது.. அறிவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும்..
காற்று ஈழத் தமிழன் பக்கம் வீசுகிறது..
நமக்கு முக்கியம் கண்ணீரல்ல.. நமது குழந்தைகள் வடித்த கண்ணீருக்கு பதில் வேண்டும்.. போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதி மன்றில் நிறுத்தப்பட வேண்டும்.
அதற்கு..
சனல் – 4 ஐ எப்படிப் பயன்படுத்துவது.. இதுவே அதன் மீதான சரியான பார்வைக் கோணமாகும்.
அலைகள்.
தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!!!



The heading is not fitting correct to the good efforts of Channel 4