பிரபல காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் சி.சத்தியநாராயணா. இவரது வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இவர் சிறிது காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று தினங்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 5 பேரன், பேத்திகளும் உள்ளனர்.
டாக்டர் சத்திய நாராயணா முன்னாள் சென்னை மாகாணத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1913-ம் ஆண்டு பிறந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்தார். 1957-ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.
பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றலானார். சென்னை மாகாண முன்னாள் முதல்- அமைச்சர் ராஜாஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பிரத்யேக டாக்டராக இருந்துள்ளார். அமெரிக்க அதிபராக கென்னடி பதவி வகித்தபோது வெள்ளை மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆருக்கும் இவர் சிகிச்சை அளித்துள்ளார். கடந்த 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி சக நடிகர் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்த அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பிரபல டாக்டர்கள் பலரும் எம்.ஜி.ஆருக்கு ஆபரேஷன் செய்ய தயங்கி ஒதுங்கிக் கொண்டனர்.
டாக்டர் சத்திய நாராயணா இதை சவாலாக எடுத்துக் கொண்டு, எம்.ஜி.ஆருக்கு ஆபரேஷன் செய்து கழுத்தில் இருந்த துப்பாக்கி தோட்டாவை அகற்றினார். நன்கு குணம் அடையும் வரை எம்.ஜி.ஆருக்கு இவரே சிகிச்சை அளித்தார். டாக்டர் சத்திய நாராயணா 6 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ தொழிலை நிறுத்திவிட்டார். எனினும் தனது மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். மரணம் அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு வரை இதை அவர் செய்து வந்தார்.
எம்.ஜி.ஆர் கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றிய டாக்டர் மரணம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
22 April 2012



what you have done in your life will be remembered no matter what.