Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளுடனான போர் வெற்றி விழாவில் பங்கேற் தமிழக இசை குழுவினர் இலங்கை செல்ல கூடாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

முள்ளி வாய்க்கால் பேரழிவு நடந்து ஓராண்டு காலம் நிறைவடைய உள்ளது. சுமார் 50 ஆயிரம் தமிழர்களும் விடுதலைப்புலிகளும் புலிகளின் தளபதிகளும் ஈவிரக்க மற்ற முறையில் கொன்றொழிக்கப்பட்ட மனித அவலத்தை சிங்களர்களின் வெற்றித் திருவிழாவாக எதிர் வரும் மே 18 அன்று கொண்டாடுவதற்கு சர்வதேசப் போர்க் குற்றவாளிகளான ராஜபக்சேக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக மே 12 லிருந்து மே 20 வரையில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் சிங்களவர்களின் வெற்றிப் பேரணி மற்றும் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்திட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை கொன்றொழித்த நாளாகவும் அந்த நாள் சிங்களவர்களின் வெற்றித்திருநாள் எனவும் வெளிப்படையாக அறிவித்து மே 18 அன்று மாபெரும் பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்தகைய வேதனைகள் நிறைந்த செய்திகளுக்குகிடையில் கொடுமையிலும் கொடுமையாக தமிழர்களே இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். என்னும் செய்தி கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமிழகத்திலிருந்து இசைக் குழுவினரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக் குழுவினரும் வரும் மே 12 ந்தேதியில் இருந்து பங்கேற்க உள்ளனர் என்பது சகித்துக் கொள்ள முடியாத வேதனையை அளிக்கிறது.

காசுக்காக கூலிக்கு மாரடிக்கும் கும்பலைப்போல் இத்தகைய இசை மற்றும் கலைக்குழுவினர் சிங்கள இனவெறியர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்குச்செல்வது மிகவும் வெட்கக்கேடான தலைக்குனிவான இழி செயலே ஆகும்.

இதனால் தமிழகத்தைச் சார்ந்த ஒட்டு மொத்த தமிழர்களும் மாபெரும் களங்கத்தை சுமக்க வேண்டி வரும். இனமான உணர்வுகள் இல்லாமல் வெறும் பிழைப்புவாதப்போக்குகளைக் கொண்ட இவர்கள் தமிழினப்பகைவர்களுக்கு ஆதரவாக செயல்பட துணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்நிலையில், இனமானத் தைக்காக்கும் வகையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீதான களங்கத்தைத் துடைக்கும் வகையில், சிங்களவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முற்றிலுமாக இப்பயணத்தை கைவிட வேண்டும். இல்லையேல் காலகாலத்திற்கும் இந்த அவமானத்தை துடைத்தெறியவே முடியாது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த இசை மற்றும் கலைக்குழுவினர் முள்ளி வாய்க்காலின் பேரவலத்தை எண்ணிப்பார்த்து இந்தப்பயணத்தை முற்றிலும் கைவிட வேண்டுமென்று விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10.5.2010 அன்று எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்தில் தமிழின உணர்வுள்ள அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 Responses to தமிழக இசை குழுவினர் இலங்கை செல்ல கூடாது: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com