தமது பிள்ளைகள் எங்கே இருக்கின்றனர் என்பதை அறிவதற்காக தமிழ் பெற்றோர்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் முகாம்களுக்கு அலைந்து திரிகின்றனர்.இராணுவத்தினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்கவேண்டுமென ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அநுரகுமார திசாநாயக்க, குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது;
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பில் குழப்பமான பல்வேறு பட்ட எண்ணிக்கை குறித்த அறிக்கைகளே வெளியிடப்படுகின்றன. 15 ஆயிரம் பேர் என ஒரு அறிக்கை கூறுகிறது. 11 ஆயிரம் பேர், 8 ஆயிரம் பேரென வேறு அறிக்கைகள் கூறுகின்றன.
எனவே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான அறிக்கையை அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றனரா? எங்கே இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் பெற்றோர்களுக்கு உண்டு.
ஆனால் அவர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் முகாம் முகாமாக அலைந்து கொண்டு அழுது புலம்பித் திரிகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் 250 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது எவருக்கும் தெரியாது.
இவர்களின் பெற்றோரும் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடி முகாம்களுக்கு முன்னால் தவம் கிடக்கின்றனர். ஆனால் எந்தவித தகவல்களையும் அவர்களால் பெறமுடியவில்லை.
நடுநிலையாக சிந்திக்க முடியாத குரோத, பழிவாங்கும் உணர்வு கொண்ட இந்த அரசினால் இந்த நாட்டை எப்படி ஆசியாவின் அதியசமாக மாற்ற முடியும்? ஜனநாயக சக்திகளை அடக்கியாளவே இந்த அரசுக்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுகின்றது. ஊடகங்களை, ஊடகவியலாளர்களை, அரசின் கருத்துகளை ஏற்க மறுப்பவர்களை அடக்க அவசரகாலச் சட்டத்தையே அரசு பயன்படுத்துகின்றது.
மே தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இ.போ.ச.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தாக்குதல் நடத்தி கலைத்துள்ளனர். தமது உணர்வுகளை ஆர்ப்பாட்டம் மூலம் நெறிப்படுத்தும் மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த மக்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தியது எவ்வாறு? எனவே முற்றுமுழுதாக மக்களுக்கு விரோதமான ஜனநாயக சக்திகளை அடக்கியாளப் பயன்படுத்தப்படும் இந்த அவசரகாலச் சட்டத்தை இனிமேலும் நீடிக்க அனுமதிக்கக்கூடாது.
தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கையைக் கூட இந்த அரசு இது வரை வழங்கவில்லை. அந்த மக்களுக்குரிய கௌரவம், மரியாதை வழங்கப்படும் நிலை கூட ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் இனவாதத்தை மட்டும் தீவிரமாக இந்த அரசு முன்னெடுத்துள்ளது.
பொலிஸாரும் அடியாட்களும் இணைந்து செயற்படும் நிலை இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. பொலிஸார் பாதுகாப்பு வழங்க பிக்குமாரை அடியாட்கள் பலாத்காரமாக தூக்கிச் செல்கின்றனர்.
இந்த நாட்டிலுள்ள அரசியலமைப்பையே செயற்படுத்தாத அரசு, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்காத அரசு, 17 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தாத அரசு புதிய சட்டங்களை அமுல்படுத்த முயற்சிக்கின்றது.



0 Responses to பிள்ளைகளின் புகைப்படங்களுடன் கண்ணீருடன் அலைகின்றனர் தமிழ் பெற்றோர் : அனுரகுமார