ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வு ஆஸ்திரேலியா மெல்பேர்னில் எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தாயக விடுதலைக்கான போரில் வீரகாவியமான தளபதிகளின் நினைவுப்பாடல்களின் இறுவட்டுக்களும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.இந்த நிகழ்வு தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விக்டோரிய கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு:-
ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணத்தில் ஜூலை மாத நினைவுகள், சிறிலங்கா அடக்குமுறை அரசின் இனப்படுகொலைகளின் தொடராகவும் அதனை எதிர்த்துநின்ற எழுகைகளாகவும் நீண்டு விரிகின்றது. உரிமைகளுக்காக உயர்த்தப்பட்ட குரலை நசுக்கி, தமிழர்களின் இருப்பை அழித்துவிடும் நோக்கில் இன்றுவரை சிறிலங்கா அரச ஆட்சியாளர்கள் செயற்பட்டுவருகின்றார்கள்.
1983 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நிகழ்ந்தேறிய ”கறுப்பு ஜூலை” யின் கோரக்கரங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை சிங்கள தேசத்தின் மையத்தில் வைத்து வீதி வீதியாக கொன்றொழித்தது. அங்குவாழ்ந்த ஏனைய தமிழ் மக்களையும் கப்பலில் ஏற்றி சிங்கள தேசத்திலிருந்து தமிழர்களின் தேசத்திற்கு விரட்டியடித்த வரலாறுகள் மறக்கக்கூடியதல்ல.
இவ்வாறான தமிழர்களின் அவலவாழ்வை போக்கி, தமிழர்களின் அமைதியான சுதந்திரமான வாழ்வுக்காக, தமது உயிரை கொடையளித்து தமிழரின் விடுதலைக்கான பயணத்தில் கரும்புலி மில்லர் உருவாக்கிய புதிய பாதையும் ‘ஜூலை மாதத்தின் பெரும் நினைவுகள்’.
இப்போது தமிழரின் தேசமான இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பெருநிலத்திலிருந்து, தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை அழித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி, தமிழர்களை தமிழரின் தாயகத்திலிருந்தும் விரட்டியடிக்கும் பாரிய நாசகாரதிட்டத்தை மிகவும் தந்திரமான முறையில் சிங்களதேசம் முன்னெடுக்கிறது.
இவ்வாறு தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வே கேள்விக்குறியாகி இருக்கின்ற நிலையில், ஜூலை மாதங்களில் நடந்தேறிய ஒவ்வொரு நிகழ்வுகளும் தமிழர்களின் வரலாற்றில் ஆழப்பதிந்தவை. அவை சிறிலங்கா தேசத்தின் அடக்குமுறைகளாலும், அதற்கு எதிராக தம்மை உயிராயுதமாக்கிய வீரர்களின் தியாகத்தாலும் நிரம்பியுள்ளது.
இவ்வகையில், ஜூலை மாத நிகழ்வுகளை நினைவுகூரும் நிகழ்வு, அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில், மெல்பேனில் எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (“கறுப்பு ஜூலை நாள்“) அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தாயக விடுதலைக்கான போரில் வீரகாவியமான தளபதிகளின் நினைவுப்பாடல்களின் இறுவட்டுக்களும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
ஜூலை மாதத்தின் நிகழ்வுகளை நினைவுகூரும் இந்நிகழ்வில், அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்: ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.00 மணி(25th July 2010)
நிகழ்வு நடைபெறும் இடம்: Clayton Hall, 264 Clayton Road, Clayton Victoria-3168(Melway Ref:79 C2)
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்,
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(விக்ரோரியா)



0 Responses to மெல்பேர்னில் கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வும் தளபதிகளின் நினைவுப்பாடல் இறுவட்டு வெளியீடும்!