எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுக்களுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.உள்நாட்டின் நீதிமன்றத் துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் களங்கம் ஏற்படுமாயின் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.
பயங்கரவாத யுத்தம் இல்லாத இலங்கையில் சலக இன மக்களும் சமாதானத்துடன் வாழ்கின்றமை இலங்கை அடைந்த பாரிய வெற்றியாகும். இதேபோன்று பொருளாதார அபிவிருத்தியில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய தபால் சேவை தொல் பொருள் கூடம் மற்றும் முத்திரை கண்காட்சியகம் ஆகியவற்றை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யுத்தம் இல்லாத சமாதானமான இலங்கையே அனைவரது எதிர்பார்ப்புமாகும். தற்போது நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் அரசும் நாட்டு மக்களும் செயற்படுகின்றனர். ஆனால் இலங்கையின் அபிவிருத்தி பயணத்திற்கு எதிராக பல்வேறு காரணங்களை முன்வைத்து சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
கடந்தகாலங்களில் பயங்கரவாத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் போதும் சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுத்தது.
அதேபோன்று தற்போதும் நாம் பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடைய முயற்சி செய்கையில் அதனை தடுக்கும் வகையில் உள்நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உள்ளதாகக் கூறி சர்வதேசம் விசாரணைக் குழு மூலம் அழுத்தங்களைக் கொடுக்கிறது.
உள் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் நீதிமன்றங்கள் சுயாதீன தன்மையுடன் செயற்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக தீர்ப்புக்கள் வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் நீதிமன்றத்தை அகெளரவப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை.
இவ்வாறான இலங்கையில் நீதிமன்றத்துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் அகெளரவம் ஏற்படுமாயின் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாசரணைகளுக்கு உள் நாட்டிலும் உதிவகள் வழங்கப்படுவதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவரைச் சந்தித்த போது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் அரசாங்கத்திற்கு உதவி செய்வோம்.
ஆனால் உள் நாட்டில் பல விடயங்களில் எதிராக செயற்படும் நிலையே உள்ளது எனக் கூறினார். ஆனால் இலங்கையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு அமைவாக உலக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் மகிந்தராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to சர்வதேச விசாரணைக் குழுக்களுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிய முடியாது: மகிந்த