Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மழை, பனி, கடும் குளிர் என பிரஞ்சு மக்களையே வீட்டினுள் முடங்க வைக்கும் கால நிலையிலும் தமிழர்கள் தம் தேசத்தின் கடமைக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் வலிமை குறைந்து போய்விடவில்லை.

ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், மூத்தவர்களுமாக மெழுகுவர்த்தி ஏந்தி எம் தேசத்தின் உறவுகளுக்காக ஆவேசக் குரல் எழுப்பியது பிரஞ்சு மக்களின் மனதையும் கலங்க வைத்தது.

முள்ளிவாய்க்காலில் பல சூழ்ச்சி வலையில் (சங்கிலியனுக்கும், பண்டாரவன்னியனுக்கும் நடந்தது போல) சிக்கி மாபெரும் அழிவுகளுடன் அமைதிப்படுத்தப்பட்ட எமது விடுதலைப்போராட்டம் நியாயமானது. அந்த மக்கள் போராளிகளின் தியாகங்களை நாமும், இந்த உலகமும் மறக்ககூடாது உணரவேண்டும் என்றும், அங்கே எமது மக்கள் விடுதலை அடையும் வரை இங்கு நாம் தொடர்ந்து போராடுவோம் என்ற உணர்வு மேலோங்க ஒன்று கூடியிருந்தனர்.

ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முடிவுரை எழுத உலக நாடுகளை ஏமாற்றி, மனிதப் படுகொலை நடாத்தியதை உலகின் மனச்சாட்சிக்கு எடுத்துரைக்கும் பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவையின் தொடர் போராட்டத்தின் 59-வது வாரத் தொடர்ச்சியாக மக்கள் ஒன்றுகூடல் 22-12-2010 புதன்கிழமை பிரான்சு உயர்நீதிமன்றத்துக்கு அருகே நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டது என்று மக்களை விடுதலைத் தளத்திலிருந்து அகற்ற நினைப்பவர்களும், சிங்கள அரசின் சதிவலைக்குள் புலம்பெயர் தமிழர்களைச் சிக்க வைத்து சிதைக்க முற்படுபவர்களும் கரம் கோர்த்து களம் இறங்கியிருக்கும் வேளையில், புலம்பெயர் தமிழர்கள் தேசியத் தலைவர் அவர்களது பாதையில் தொடர்ந்தும் பயணித்து வருகின்றார்கள்.

எமது தேசிய தலைவர் அவர்களும், தமிழிழ தேசிய அரசும் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிய அனைத்துலக தலைமைப்பீடமும், அதனது பிரான்ஸ் கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் தமிழீழ விடுதலை நோக்கிய தமிழ் மக்களது போராட்டத்தை இன்று வரை தொடர்ந்தே வருகின்றன. பிரான்சிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களும் கூட்டாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டங்களுக்குப் பலம் சேர்த்து வருகின்றன.

கடந்த வருடம் மே மாதத்தில் நோர்வே நாட்டில் நடாத்தப்பட்ட 'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்' என்ற கோரிக்கையுடன் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 99 வீதத்திற்கும் அதிகமான மக்கள் 'தமிழீழமே தாகம்' என்று வாக்களித்து, அனைத்துலக நாடுகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கான இறுதித் தீர்வினை வலியுறுத்தியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பிரான்சில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் 32,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டு, 99 வீதத்திற்கும் அதிகமானோர் தமிழீழத்திற்காக வாக்களித்தனர். தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்பட்ட அனைத்து வாக்கெடுப்புக்களிலும் தமிழர்கள் 'தமிழீழமே தீர்வு' என்று வலியுறுத்தினார்கள். இந்த மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிற்கு, பல நாடுகளில் அந்நாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவும் இருந்தது.

ஆனாலும், சிங்கள அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் திசைதிருப்பிப் பயணிக்க வைக்கும் பணியினை மேற்கொண்ட தமிழ்த் தொலைக்காட்சியும், சிறிலங்கா அரசு சார்பு ஊடகங்களும், புலம்பெயர் தமிழர்களது இந்த ஜனநாயக போராட்டத்தை கொச்சைப்படுத்த முற்பட்டனர். ஆனாலும், அனைத்துச் சூழ்ச்சி வலைகளையும் அறுத்தெறிந்த எமது புலம்பெயர் தமிழீழ மக்கள், பிரான்சிலும் ஏனைய நாடுகளிலும் தாயகத்தின் விடுதலை நோக்கிய தமது தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

எமது மக்கள் வழங்கிய இந்த ஆணையினை நாம் ஐரோப்பாவின் 47 நாடுகள் கொண்ட ஐரோப்பிய கவுன்சிலுக்கும், மற்றும் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கும் எடுத்து சென்று எமது மக்களின் தேசிய அபிலாசைகளை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எமது மக்களின் தொடர் போராட்டங்கள் ஊடாக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், .நா. வின் இன்னர் சிற்றி பிறஸ் ஆகிய மனித நேய நிறுவனங்களின் அழுத்தங்களால் இன்று சர்வதேசம் தாம் செய்த தவறுகளை புரிந்து கொண்டுள்ளது. இதனால், சிறீலங்கா அரசு போர்க் குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய அளவிற்குத் தள்ளப்பட்டு வருகின்றது.

ஆனாலும், இதை எமக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணித் திருப்தி கொள்ளாமல் நாம் இதை விடவும் வேகமாகவும், பலமாகவும் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். சிறீலங்காவில் நடைபெற்றது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர் குற்றம் மட்டுமல்ல, அங்கே சிங்கள அரசுகளால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பு நடவடிக்கையின் உச்ச வடிவமே.

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம். இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன அழிப்பு நடவடிக்கைகள் இப்போதும் தொடர்ந்து வருகின்றது. சிங்கள அரசுகள் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி அதனை குற்ற பத்திரிகையாக்கி உலக கிரிமினல் குற்ற நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல நாம் சகல வழிகளிலும் முற்படவேண்டும்.

உங்கள் முறைப்பாடுகளையும், ஆதாரங்களையும் உலக கிரிமினல் குற்ற நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான மாதிரிக் கடிதமும், மாதிரி முறைப்பாடு ஒன்றும் கீழ் குறிப்பிடப்பட்ட முகவரியில் உள்ளது. இதனை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

http://www.causes.com/causes/404035-petition-international-criminal-court-to-investigate-sri-lanka-s-war-crimes-against-tamils?m=cac0d0bc

அப்படி முடியாதவர்கள் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் மக்கள் பிரதிநிதி யாருடனும் தொடர்பு கொண்டு நீங்கள் பெற்றுக்கொள்ளாம்.

இத்துடன், பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையாகிய நாமும், பன்னாட்டு தமிழ் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய உலக தமிழர் பேரவை லண்டனில் தலைமைக் காரியாலயத்தை அமைத்து அருட்தந்தை இமானுவேல் அடிகளாரின் தலைமையில் இயங்கி வருகின்றது. உலகத் தமிழர் பேரவை உலகின் பல அரசுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, எமது மக்களுக்கான விடுதலையின் முக்கியதுவத்தை எடுத்து கூறி வருகிறது. சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம், மனித நேயத்திற்க்கு எதிரான குற்றம் ஆகியவற்றிற்கான ஆதாரங்களைத் திரட்டி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் எமது பணியினை இடைவிடாது தொடர்ந்து வருகின்றோம்.

எனவே, நாம் எமது மக்களுடன் இணைந்து குளிர், மழை, பனி, வெயில் என்று பார்க்காமல் மேற்கொள்ளும் போராட்டங்கள் நிட்சயம் எமது மக்களை சிங்கள இனவாதத்திடமிருந்து விடுவிக்கும். தமிழீழத்தில் சிங்கள அரசால் மௌனிக்க வைக்கப்பட்டுள்ள எமது மக்களின் உணர்வுகளாகவே, அவர்களின் குரலாகவே நாம் கிளர்ந்து நிற்கிறோம்.

பிரான்சில் இதுவரை காலமும் நடைபெற்ற போராட்டம் மீண்டும் ஜனவரி 26ம் திகதி புதன்கிழமை முதல் பிரான்சு நாடு பாராளுமன்ற முன்றலில் தொடரும் என்பதை எமது மக்களுக்கு தெரிவித்து கொள்வதுடன், எமது மண்ணில் வாழும் மக்களை எமது மனதில் நினைவு வைத்துகொள்வோம். பிறக்கப்போகும் 2011 புதுவருடத்தை எங்கள் மக்களுக்கான விடிவைத் தரும் ஆண்டாக வரவேற்று, தமிழீழத்தின் திசை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
தொடர்பு: 06 15 88 42 21
மின்னஞ்சல்: mte.france@gmail.com




0 Responses to மழையோ! குளிரோ! பனியோ! தேசியத்தை நோக்கிய எமது பயணம் தொடரும்!: பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com