மீளக்குடியமர்ந்த மக்களுக்காக உதவிகளை வழங்குவதற்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வருகைதந்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்றைய தினம் வடமராட்சிகிழக்குப் பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்கச்சென்றபோதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 30 வருடமாக நடைபெற்றுவந்த யுத்தம் இன்று நிறைவடைந்துள்ளது ஆனாலும் வன்னியில் மக்களின் முகங்களில் யுத்தப்பாதிப்புக்களையே அதிகமாகப் பார்க்க முடிகின்றது.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் நடவடிக்கைகளால் இன்னமும் அரசிற்கு தமிழ் மக்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆயினும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுசேர்ந்து பணியாற்ற முன்வந்திருப்பது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. விரைவில் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
30 வருடமாக நாட்டில் நடைபெற்ற யுத்தத்திற்கும் இவ்வளவு அழிவுகளுக்கும் நானும் ஒரு காரணம் என்றார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்தரி அலன்ரின் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, மாவை சேனாதிராசா, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மருதங்கேணியில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா தெரிவித்தவை வருமாறு:
முன்னர் சாவகச்சேரியிலிருந்து மருதங்கேணிப் பிரதேசத்திற்கு முப்பது நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் இப்பொழுது நாம் மூன்று மணித்தியாலங்களைச் செலவிட வேண்டியுள்ளது.
மருதங்கேணிப் பிரதேச மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னர் மீள்குடியமர்த்தப்பட்டு மூன்று மாதங்களான நிலையில் மீண்டும் மழை வெள்ளத்தால் அகதிகளாகியுள்ளனர்.
கடந்த 30 வருடங்களில் நாம் அனைத்தையும் இழந்து நிற்கிறோம். பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். நானும் கூட இன்னும் எனது சொந்த வீட்டுக்குச் செல்லமுடியாத நிலைமையில் உள்ளேன்.
யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்களாகிவிட்டன. இன்னும் ஏன் இந்தப் பாதுகாப்பு வலயம்? இது அவசியமில்லை.
இந்த மக்களின் துயரங்களை அமைச்சர் வீரக்கோன், பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஆகியோர் நேரடியாகப் பார்த்துள்ளனர். இதன் பின்னராவது ஜனாதிபதியிடமும், பாதுகாப்பு அமைச்சரிடமும் எடுத்துக்கூறி பாதுகாப்பு வலயங்களை அகற்றி வைக்கவேண்டும்.
இதற்காகத்தான் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தோம். எனவே, அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதோடு எமது மக்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும் இவ்வாறு மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.



0 Responses to யுத்தத்திற்கும் அழிவுகளுக்கும் நானும் ஒரு காரணம்: கருணா (சும்மான்)