கடந்த வாரம் பிரபாகரனின் தயார் பார்வதிஅம்மாள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இந்தியாவில் உள்ள ஊடகங்களில் இருந்து ஒரு செய்தி ஊற்றெடுத்தது. பின்னர் அது இயல்பான செய்தியாக சகல இடங்களிலும் ஒரு சுற்று வந்தும் போனது..
அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்… கோமா நிலையை அடைந்துவிட்டார்.. வைத்தியசாலை மாற்றப்பட்டார் என்பது போன்ற தகவல்களை அச்செய்திகள் சுமந்தும் வந்தன..
இப்போது…
அந்தச் செய்தி அப்பட்டமான பொய்ச் செய்தி என்பதும், திட்டமிட்டு பரப்பப்பட்ட கட்டுக்கதை என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரபாகரனின் சகோதரரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அலைகளுக்கு தெரிவித்தார். தாயாருக்கு வழமைபோல இயலாத நிலை இருக்கிறது ஆனால் கோமாநிலை அடைந்தார், வைத்தியசாலை மாற்றப்பட்டார் என்பதெல்லாம் நடைபெறாத சம்பவங்களாக இருக்கிறதென்றும், இவற்றை பரப்பியது யார் என்று தெரியவில்லை என்றும் எம்மிடம் கூறினார்.
01. இப்படியான செய்திகளை பரப்பியதன் நோக்கங்கள் என்னவாக இருக்கலாம் என்பதே இப்போது சிந்தையை தூண்டுகிறது. இந்தச் செய்தியை முதலாவதாக வெளியிட்டவர்கள் யாருடைய வழிகாட்டலில் வெளியிட்டார்கள்… என்பது ஆய்வுக்குரியதாகிறது..
02. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அதை ஆழம்பார்க்க கட்டிவிடப்பட்ட ஒரு செய்தியா..?
03. இல்லை உள்ளுராட்சி தேர்தலில் பிரபாகரனின் தாயாரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட யாராவது முயற்சிக்கிறார்களா.. ?
பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளது இச்செய்தி. இப்படி பல சந்தேகங்கள் இருந்தாலும் செய்தி அப்பட்டமான பொய் என்பது இப்போது தெரியவந்துள்ளது. வைத்தியசாலை வட்டாரங்கள், வல்வையில் உள்ள பார்வதி அம்மாள் உறவினர்கள் யாருமே இந்தச் செய்தியை அறிந்திருக்கவில்லை. ஆகவே பார்வதியம்மாள் குறித்து வெளியாகும் செய்திகள் சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரி, மற்றும் பார்வதியம்மாள் பிள்ளைகள் தவிர மற்றயவர்களால் வெளியிடப்பட்டால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற செய்திகளை பிரதி செய்து வெளியிடும்போது கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பார்வதியம்மாள் நலமாக உள்ளார் என்ற தகவல் மகிழ்வு தருகிறது.
நன்றி: அலைகள்



0 Responses to தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் நலமாக உள்ளார், பரவிய செய்தி பொய்!