இதன் ஒரு அங்கமாக இன்று (பதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக தொடரூந்து சேவையில் இந்திய தொடரூந்துப் பெட்டிகளை இழுத்துச் செல்ல சீன இயந்திரத்தை சிறீலங்கா வேண்டுமென்றே பாவித்து. இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
புதிய தொடரூந்துப் பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க புதிய தொடரூந்து இயந்திரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இன்றுவரை அது தயார் செய்ய முடியாத நிலையில், இறுதியில் சீனத் தயாரிப்பு தொடரூந்து இயந்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால், இந்த ஆரம்ப நிகழ்வை ஒத்திப் போட்டிருக்கலாம். மாறாக சீன இயந்திரத்தைக் கொண்டு ஆரம்ப நிகழ்வை நடத்தி முடித்திருக்கின்றது.
இதேவேளை, சிறீலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா சிறீலங்காவிற்கு அமைத்துக்கொடுத்த புதிய தொடரூந்துப் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் விதத்தில், குறிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக தாமதமாகவே தொடரூந்துப் பயணம் ஆரம்பித்ததால் கோபமடைந்த அமைச்சர் குமார் வெல்கம காலியில் நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்ற மறுத்திருக்கின்றார்.
இருப்பினும் 42 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மாத்தறைக்கு 38 நிமிடங்களில் (வழமையாக ஒரு மத்தியாலத்திற்கு மேல் பிடிக்கும்) தொடரூந்து சென்று சேர்ந்ததும், தன்னை சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் குமார் வெல்கம அங்கு உரையாற்றியிருக்கின்றார்.
167 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்தியா மாத்தறை – காலி அதிவேக தொடரூந்துப் பாதையை அமைத்துக் கொடுத்திருந்தது.
இதுவரை நாட்களும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையின் தொடரூந்துகள் பயணித்துவரும் நிலையில், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்தத் தொடரூந்துப் பாதைகளையும், தொடரூந்தையும் இந்தியா வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றது.
இந்த நிகழ்வில் கொழும்பிற்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, அமைச்சர் குமார் வெல்கம உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இது இவ்வாறிருக்க சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அக்கறை செலுத்ததாது, தொடரூந்து தொடக்க விழாவில் இந்தியத் தூதுவர் கலந்து கொண்டமை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பதுடன், பலரது கண்டனங்களையும் சம்பாதித்திருக்கின்றது.
கடற்றொழிலாளர்கள் விடயத்தை தமிழ்நாட்டின் தேர்தல் காலத்திலாவது கண்டிக்க காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி முன்வந்துள்ள பின்புலத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக அன்றி, ஊடகங்கள் வாயிலாக தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், கொழும்பு தூதரக மட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.





0 Responses to சீன இயந்திரத்தில் இந்திய தொடரூந்துப் பெட்டிகள்: சங்கடத்தில் இந்தியா (படங்கள் இணைப்பு)