மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம். இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அல்லாது உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் மனதிலே ஏற்பட்டுள்ள மனவேதனையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 15 ஆம் தேதியிட்ட "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளிதழில், "இலங்கை விமானப்படையின் ஆண்டு விழாவில் சுகாய் போர் விமானங்கள் " என்ற தலைப்பிட்ட செய்தியை இத்துடன் இணைத்து உள்ளேன்.
செய்தித்தாளில் இடம்பெற்று உள்ள செய்தியின் அடிப்படையில், இலங்கையின் விமானப்படை தனது 16 ஆவது ஆண்டு நிறைவை வருகின்ற மார்ச் மாதம் கொண்டாட உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியில் நமது இந்திய விமானப்படை தனது அணி வரிசையின் உச்ச நிலையில் உள்ள சுகாய் போர் விமானங்களை, இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் நாக் பிரவுன் தலைமையில் அனுப்பி, கொழும்புவில் நடைபெறுகின்ற விமானப்படைக் கொண்டாட்டத்தில் வான்வெளி சாகசத்தில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டு உள்ளதாகவும் அறிகின்றேன். மேலும், சுகாய் போர் விமானங்கள் மட்டும் அன்றி, இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவில் சாகசத்தை நிகழ்த்தக்கூடிய சாரங் வீரர்களும், கொழும்பில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ரட்மலான விமானதளத்தில் நடத்த உள்ள விழா நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானப்படைப் பிரிவின் போர் வீரர்களின் அணிவகுப்புக் காட்சியும், போர் வீரர்களின் இசைக்குழுவைச் சார்ந்தவர்களும் ,வான்வெளியில் இருந்து குதித்து அந்தரத்தில் சாகசம் நிகழ்த்தக்கூடிய இந்திய பாராசூட் வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த வேளையில், 2004 ஆம் வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் நாள், நான் தங்களிடம் நேரில் அளித்த கடிதத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அந்தக் கடிதத்தில், இந்திய விமானப்படை தங்களது செலவில், இலங்கையின் பலாலி விமானதளத்தைப் புதுப்பிப்பதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து இருந்தேன். ஏனென்றால், அந்தப் பலாலி விமான தளத்தைப் பயன்படுத்தி, இலங்கை விமானப்படை யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற அப்பாவி மக்கள் மீது விமானத்தில் இருந்து கொத்துக்குண்டுகளை வீசியும், குண்டுமழை பெய்தும், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மக்கள் வாழ்கின்ற வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்ற அனைத்து இடங்களும் குண்டு வீச்சால் தரைமட்டமாயின.
1995 ஆம் வருடம் நவோலியில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் மீது குண்டு வீசப்பட்டபோது, நெஞ்சைப் பிளக்கின்ற படுகொலை நடத்தப்பட்டது. இரத்தத்தை உறையச் செய்யக்கூடிய வகையில் ,165 பேர் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உயிர் இழந்தனர். போப் இரண்டாம் ஜான் பால் அவர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த புத்ரோஸ் புத்ரோஸ் காலி அவர்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் வழங்குவது பன்னாட்டு சமுதாயத்தின் கடமை என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
உண்மையான நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும், பலாலி விமானதளத்தை புதுப்பிக்கின்ற பணியைக் கைவிட வேண்டும் என்று தங்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், என்னுடைய வேண்டுகோள் எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படைத் தளபதி டொனால்டு பெரைரா தனது பேட்டியில், "பலாலி விமானதளத்தை, இந்திய விமானப்படை அவர்களது செலவில் புதுப்பித்துக் கொடுத்தது" என்று தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் நாளன்று நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தையும் நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கை விமானப்படைக்கு ராடார் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்க உள்ளது என்ற பத்திரிக்கைச் செய்தியை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவியும் வழங்கக்கூடாது என்று தெரிவித்து இருந்தேன். ஆனால், இந்திய அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு ராடார் கருவிகளை வழங்கியது.
2006 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தங்களைச் சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை நேரில் வழங்கினேன். அதில், இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ராடார் கருவிகளை வழங்கிய செய்தியைக்கண்டு அதிர்ச்சியுற்றேன் என்று இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தி அப்பாவித் தமிழர்களை அழிக்கின்றபோது அந்த நடவடிக்கைக்கு இந்திய உறுதுணையாக இருந்தது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் ஆதலால், உடனடியாக இந்தியா ராடார் கருவிகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தேன். அந்த நியாயமான வேண்டுகோளையும் தாங்கள் பரிசீலிக்கவில்லை.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி செஞ்சோலையில் உள்ள ஆதரவற்ற தமிழ்பெண் குழந்தைகள் தங்கி இருந்த இடத்தில் இலங்கை விமானப்படை குண்டு வீசியதில், 61 பெண் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டு, 176 குழந்தைகள் கொடுங்காயத்திற்கு ஆளானபோது என்னுடைய அச்சம் உண்மையானது. இந்தக் கொடூரமான படுகொலை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் மனதில் தாங்க முடியாத, இதயத்தை உறைய வைக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது. இனவெறியோடு குண்டு மழை பொழிந்து குழந்தைகளைக் கொன்று தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி அரசை, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டித்தது. ஆனால், இந்தியா எந்தவொரு கண்டனத்தையும் தெரிவிக்காதது மட்டும் அல்ல, வருத்தத்தையும் கூட வெளிப்படுத்தவில்லை.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி நான் தங்களிடம் நேரிடையாக வழங்கிய கடிதத்தில், ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த செஞ்சோலைப் படுகொலையை விவரித்து இருந்ததேன்.உலகில் அண்மைக்காலத்தில் நடந்த மிகப்பெரிய மனித அழிவு, இலங்கையில் சிங்கள இனவெறி பிடித்த மகிந்த ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைதான். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் இலங்கை விமானப்படை நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வெளி குண்டுவீச்சு தாக்குதல் மூலமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். குண்டு வீச்சில் இருந்து தப்புவதற்காக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பதுங்கு குழியில் பதுங்கிக் கொண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பள்ளிக்குழந்தைகள் கண்மூடித்தனமான வான்வெளித் தாக்குதலினால் துண்டு துண்டாகச் சிதறிப்போனார்கள். உலகின் எந்தப் பகுதியிலும் நடந்திராத நிகழ்வாக மருத்துவமனைகளும் இலங்கை விமானப்படையின் வான்வெளித் தாக்குதலில் தப்பவில்லை.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரான பான்-கீ-மூன், இலங்கை அரசு நடத்திய போர்க் குற்றங்களை ஆய்வு செய்ய மூன்றுபேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளார். 2010 ஜனவரியில், டப்ளின் நகரில் நடைபெற்ற, இலங்கையின் போர்க் குற்றங்களை ஆய்வு செய்த, ஐரீஸ் அரசாங்கத்தின் விசாரணைத் தீர்ப்பாயம் இலங்கை அரசை போர்க்குற்றவாளி எனத் தீர்மானித்தது.2011 ஜனவரியில், நான் தங்களிடம் நேரில் கொடுத்த கடிதத்தில், இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற வேதனையும், ஆத்திரமும் தமிழ்நாட்டில் இளைய தலைமுறையிடம் ஏற்பட்டு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுகாய் போர் விமானங்களை இலங்கை விமானப்படையின் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்கச் செய்யும் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு நியாயம் அற்றது; அழிவை ஏற்படுத்தும் தவறான முடிவு. வேதனைத்தீயில் வெந்து கொண்டு இருக்கின்ற தமிழ் மக்கள் உள்ளத்தில், இந்திய அரசாங்கத்தின் மீது மேலும் கோபத்தையும், வெறுப்பையும் எதிர்ப்பையும் வளரச் செய்யும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.தமிழர்கள் மீது குண்டு வீசிக் கொன்று ஒழித்ததை, இலங்கை அரசாங்கம் விமானப்படை விழாவாகக் கொண்டாடுகின்றது. அந்தக் கொண்டாட்டங்களில், இந்திய அரசும் பங்கு ஏற்கப் போகிறதா?
அவ்வாறு பங்கு ஏற்றால், இலங்கை அரசாங்கம் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக இராணுவத் தாக்குதல் மூலமாக அழித்ததற்கு உதவியாகப் பங்கு ஏற்றதற்கு, இந்திய அரசு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாகக் கருத வேண்டிய நிலைமை ஏற்படும். வருத்தத்தைச் சுமந்துகொண்டு இருக்கின்ற தமிழர்களின் உள்ளத்தில், கொழுந்து விட்டு எரியும் வேதனை நெருப்பில் மேலும் ஊற்றுகின்ற செயலைச் செய்யாதீர்கள் என்று வேண்டுகிறேன்.ஏற்கனவே காயம்பட்ட உள்ளங்களை மேலும் குத்திக் கிளறாதீர்கள், வெந்த புண்ணில் வேல் வீசாதீர்கள் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் இனத்தின் இளைய தலைமுறையின் உள்ளத்தில், இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைக்காதீர்கள். அப்படிச் செய்தால், இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு எனும் கோட்பாடு தகர்ந்து போகும்.
மேற்கூறிய காரணங்களுக்காக, இலங்கை விமானப்படைக் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்க, இந்திய விமானப்படையை அனுப்பக்கூடாது என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோகேட்டுக் கொண்டு உள்ளார்.
தாயகம் தலைமைக் கழகம்
சென்னை௮ மறுமலர்ச்சி தி.மு.க.
16.02.2011
அதிர்வு



0 Responses to இலங்கை விழாவில் இந்திய விமானங்கள் பங்கேற்க கூடாது. பிரதமருக்கு வைகோ கடிதம்