பெருமைக்குரிய வீரத்தாய் பார்வதி அம்மாவின் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. சாதாரண பெண்மணியென்பதற்கப்பால் ஈழத்தமிழர்களின் சூரியத்தேவனை உலகிற்குப் பெற்றுக்கொடுத்து, ஆளாக்கி, வளர்த்தெடுத்து தலைவருடைய விடுதலைப்பயணத்திற்கு தோள் கொடுத்து என இவரது வாழ்க்கை விரிகிறது.
இவர் தேசியத் தலைவரிற்கு தாயாராக இருந்தாலும் சாதாரண எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். தேசியத்தலைவரின் பெற்றோர் என்பதற்காக இவரும் இவருடைய துணைவர் மதிப்பிற்குமுரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறீலங்கா – இந்திய அரசினால் பல துன்பங்களிற்கு உள்ளாக வேண்டியிருந்தது.
தமது தள்ளாத வயதிலும் இவர்கள் சிங்கள அரசால் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் போது அங்கிருந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த இவர்கள் இறுதியில் முகாமில் போதிய பராமரிப்பின்றியே வாழ நேரிட்டது. இந்நிலையில் தனது அன்புத் துணைவர் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களையும் பறிகொடுக்க நேரிட்டது.
தமிழ்நாட்டில் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சையை மறுத்து தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையிலே சிகிச்சை பெற்று வந்த அன்னை, அங்கேயே இயற்கை எய்தினார் என்ற செய்தி உலகத்தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இவரது பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினருக்கும், உலகம் வாழ் தமிழருக்கும் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, எமது வீரத்தாய்க்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
இணைப்பாளர்
த.கயல்மதி
அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு



0 Responses to தலைவனை ஈன்றளித்த வீரத்தாய்க்கு ஈழத்தமிழ்ப் பெண்களினம் தலைவணங்குகிறது