Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் விபத்துக்குள்ளானது குறித்து கடும் அதிர்ச்சியுற்றுள்ள மஹிந்தா உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.

விமானப்படையின் கிபீர் விமானங்கள் விபத்துக்குள்ளானதை அறிந்தவுடன் போர்க்குற்றவாளி மகிந்தவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் யாவும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து மஹிந்தா விபத்து இடம்பெற்ற அத்தனகல்லைப் பிரதேசத்துக்கு விரைந்துள்ளார்.

விபத்தில் காயமானவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனை அல்லது கம்பஹா பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக மஹிந்தாவின் பணிப்பின் பேரில் விசேட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருக்கும் வதுபிட்டிவலை மருத்துவமனை மற்றும் கம்பஹா பொதுமருத்துவமனை என்பன காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிக்க உச்சகட்ட தயார்நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

பிரஸ்தாப மருத்துவமனைகளிலிருந்து தலா இரண்டு வீதம் நான்கு அம்புலன்ஸ் வண்டிகளும் விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை நோக்கி துரித கதியில் அனுப்பப்பட்டுள்ளன. ஆயினும் விபத்தின் காரணமாக காயமுற்றவர்கள் தொடர்பான எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.

விமானத்தின் தானியங்கி பரசூட் காரணமாக விமானிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பிக் கொண்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் பெரும் பங்காற்றிய இரண்டு கிபீர் விமானங்களே விபத்துக்குள்ளாகியிருப்பதாக விமானப்படை வட்டாரங்களின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு

விபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த விமானியும் கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக விமானப்படை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த விமானி ப்ளைட் லெப்டினன்ட் தர அதிகாரியான மொனாத் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் கட்டுநாயக்க வான்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஸ்குவாட்ரன் லீடர் ஜயகொடி எனும் விமானியே விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் ஆரம்ப கட்டமாக வதுபிட்டிவலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின் பெரும்பாலும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விமான விபத்தின் போது ஒரு விமானம் அத்தனகல்லையின் நெல்லிகஹமுல பிரதேசத்தின் வீடொன்றின் மீது விழுந்துள்ளதால், வீடு பலத்த சேதமடைந்துள்ளது. மற்றைய விமானம் அதற்கு இருநூறு மீட்டர் தூரம் தள்ளி வனப்பகுதிக்குள் விழுந்துள்ளது.

இச்செய்தி எழுதப்படும் நேரத்திலும் விமானங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன், அப்பிரதேசத்தின் பெரும்பாலான மரங்களும் விமானங்களின் தீச்சுவாலை காரணமாக கருகிப் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆயினும் விமான விபத்துக் காரணமாக சிவிலியன்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.

மூன்றாம் இணைப்பு

யக்கலையில் இடம்பெற்ற கிபிர் வானூர்தி விபத்தில் விமானி ஒருவர் பலியானார். மற்றும் ஒரு விமானி பாரசூட் மூலம் உயிர்தப்பியுள்ளார்.

இந்தநிலையில் விபத்தின் போது பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்துக்குள்ளான கிபிர் விமானங்களில் ஒன்று வீதி ஒன்றில் உடைந்து வீழ்ந்துள்ளது.

மற்றும் ஒரு விமானம் வீடுகள் இருந்த இடத்தில் வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக சில வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.


0 Responses to கிபீர் விமானம் விபத்து! சம்பவ இடத்துக்கு விரைந்த போர்க்குற்றவாளி மகிந்த!! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com