சேர்பிய போர்க்குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ்ற்கு ஒரு சட்டம் சிறீலங்கா இனவாதத்திற்கு ஒரு சட்டமா...?
கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது.
1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவர் தளபதியாக இருந்தார். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 பேரை படுகொலை செய்தார்.
இவருடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என்ற பொதுமைப்பட்ட கருவியை இனத்துவேஷத்துடன் பயன்படுத்தியது இவர் புரிந்த குற்றம்.
எப்படி…?
ஓர் எளிய உதாரணம்:
சிறீலங்கா அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக உண்மையாகப் போரிடும் ஓர் அரசாக இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட சமகாலத்தில் சிங்களவருக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.
ஒன்று..
ஜனநாயகத்திற்காக போரிட்ட லசந்த போன்ற சிங்கள பத்திரிகையாளர் கொலைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எதையும் உருப்படியாக செய்து விடையை உலக மன்றின் முன் வைக்கவில்லை. ஆக பயங்கரவாதம் என்பது தமிழர்கள் செய்வது மட்டுமே என்பதுதான் சிறீலங்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராக இருந்தது.
இரண்டு…
சிறீலங்கா அரசுக்கு ஆதரவான ஆயுதம் ஏந்திய குழுக்கள் நடாத்திய படுகொலைகள், கப்பம் வசூலித்தல், ஆட்கடத்தல் போன்றவையும் போர்க்குற்றங்களே. போரைக் காரணம் காட்டியே இவை செய்யப்பட்டுள்ளன. இவைகளுக்கு எதிராகவும் சிறீலங்கா அரசு யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறும் தமிழ் இனத்தின் மேலான காழ்ப்புணர்வு மட்டுமே அது நடாத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான போராக இருந்தது.
இதைத்தான் சேர்பிய தளபதி ரட்கோ மிலாட்விஜ் செய்தார். ஆகவேதான் மிலாட்விஜ்ற்கு ஒரு நியாயம் சிறீலங்காவுக்கு ஒரு நியாயமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்து வருகிறது.
ஏனென்றால்…
இப்போது கைது செய்யப்பட்ட ரட்கோ மிலாட்விஜ் செய்த கொலைகளும் மகிந்த, கோத்தபாய, சரத்பொன்சேகா அன் கொம்பனி செய்த கொலைகள் போன்றவைதான். சேர்பிய முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற மத, இன வெறுப்பின் பாற்பட்ட போர் துஷ்பிரயோகமாகும். இத்தகைய போர்களை நடாத்துவதும், அதற்கு துணை போவதும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்பதை மரணமடைந்த முன்னால் சேர்பிய அதிபர் சொலபடோன் மிலேசெவிச் மீது ஹேக் நீதிமன்று வழங்கிய தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டது.
இப்போது அவருடைய காலத்தில் படுகொலைகளை செய்து தலை மறைவாகத் திரிந்த ரட்கோ மிலாட்விஜ் கைதாகியுள்ளார். இன்று அவரை ஒல்லாந்து போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்புவது தொடர்பான விசாரணைகள் சேர்பிய தலைநகர் பயோகோட்டில் நடைபெறுகின்றன. மேலும் ஒரு வாரத்தில் அவர் ஒல்லாந்து போர்க்குற்ற நீதிமன்று அனுப்பப்படுவார்.
தற்போது இவருக்காக வாதிட்டுக் கொண்டிருக்கும் சட்டத்தரணி இவருடைய உடல் நிலை குறித்த வைத்திய அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கைதான் சிறீலங்கா போர்க் குற்றவாளிகளுக்கு இன்னொரு சவுக்கடியாக இறங்கியிருக்கிறது.
இவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கட்டியால் ஒரு கை வழங்காமல் போய்விட்டது. எது சொன்னாலும் விளங்க முடியாதளவுக்கு டிமன்சியா நோய் பீடித்துவிட்டது. ஏறத்தாழ அந்திம காலத்தில் இருக்கிறார். இருந்தாலும் இவர் ஒல்லாந்திற்கு ஏற்றப்படுவது தவிர்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றவாளி ஒருவன் வாக்கு மாறினாலும் அவனுக்கு மன்னிப்புக் கிடையாது என்பதில் உலக நாடுகள் உறுதியாக இருக்கின்றன.
கைது நடந்த அடுத்த நிமிடமே..
சேர்பியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கும் பணிகள் மிக அருகில் வந்துவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துவிட்டது. ஐரோப்பா கொடுத்த அழுத்தத்திற்கு சேர்பிய அரசு காலத்தால் இறங்கி வந்துள்ளது.
அதுபோலவே இன்று அதிகாலை த இன்டிப்பென்டன்ட் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த அப்போட்டா பாட் இல்லத்தை சி.ஐ.ஏ தொடர்ந்து சோதிக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கிவிட்டதாக அது எழுதியுள்ளது.
மேலும்…
விசேடமான பரிசோதனைக் கருவிகளுடன் பாகிஸ்தான் அப்போட்டா பாட்டில் உள்ள பின்லேடன் இல்லத்திற்கு சி.ஐ.ஏயின் விசேட அணி புறப்படுகிறது.
செய்தியை வாசித்து பத்திரிகையை மூட..
பாகிஸ்தானுக்கு அதிரடி விஜயத்தை மேற்கொண்டுள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் என்று பீ.பீ.சியின் செய்தி முழங்குகிறது..
ஆக…
போர்க் குற்றம் புரிந்தவர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்படுவது அவசியம். இது குறித்த பாதையிலேயே இன்றைய சர்வதேசம் நடைபயில்கிறது. போர்க் குற்றவாளிகள் எதிர்கால உலகில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதற்கு இவைகள் நல்ல உதாரணங்களாகும்.
ஜி- 8 நாடுகளின் மாநாடு நடைபெற கிளரி கிளின்டன் பாகிஸ்தான் போயிருப்பது கவனிக்கத்தக்கது. சீனா இந்தியா இரு நாடுகளும் சிறீலங்காவுக்கு ஆதரவாக இருப்பதில் உள்ள எதிர்கால ஆபத்தை இந்த விஜயம் எளிதாக உணர்த்துகிறது. இதை மேலும் ஆழமாக விளங்க சில நாட்கள் எடுக்கும்.
இன்று..
எல்லாம் இழந்து, 69 வயதில் நிலை தடுமாறினாலும் கூட ரட்கோ மிலாட்விஜ் தன்னைக் காப்பாற்ற முடியவில்லை. சிறீலங்கா இனவாதிகள் கத்தித் திரிவதைப்போல மிலாட்விஜ் ஒரு சேர்பிய கதாநாயகன் என்று ஓர் ஊர்வலம் சேர்பிய தலைநகர் பயோகோட்டில் நடைபெற்றது. அது ஊர்வலம் முடிந்த கையோடு சுருண்டுவிட்டது.
இவ்வளவு செய்திகளையும் தொகுத்து மறுபடியும் சிறீலங்கா வருவோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறீலங்கா செய்திருக்கலாம், ஆனால் முள்ளிவாய்க்காலில் நடாத்திய கற்பழிப்பு, படுகொலை, வெள்ளைக்கொடி கொலை, பொதுமக்கள் மீதான குண்டுவீச்சு என்று 140.000 பேருடைய மரணத்திற்கும், புதைந்து கிடக்கும் மண்டையோட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியது அவசியம்.
அங்கு நடந்துள்ளது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல சர்வதேச போர்க்குற்றம். யுகோசுலாவியாவில் நடந்தது போன்ற குற்றச் செயலே. ஐ.நா. அறிக்கை தெளிவாக அதை வரையறை செய்துள்ளது.
இன்று தப்பினாலும், இந்தக் குற்றம் சிறீலங்கா ஆட்சியாளரை தொடரும். மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டு நினைவு மறந்தாலும் அது மிலாட்விஜ்யை தொடர்வது போல தொடரும்.
சிங்கள மக்களே போர்க் குற்றவாளிகளை கைது செய்யும்போதுதான் போர்க்குற்றத்தில் ஈடுபட்டோம் என்று வருந்த வேண்டிய நிலையும் வரும்.
தமிழக வாக்காளர் மு.கருணாநிதி, காங்கிரஸ் கூட்டணிக்கு கொடுத்த தண்டனையை சீர்தூக்கினால் இதன் பாரதூரத்தை எளிதாக விளங்க முடியும்.
இனி..
சிறீலங்காவுக்கு உதவிய சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் போர்க்குற்றத்தில் சிறீலங்கா ஈடுபடும் என்று எமக்கு தெரியாது என்று தப்பிக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.
மிலாட்விஜ்ற்கு ஒரு நீதி, சிறீலங்கா போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு நீதி என்று கூற உலக சட்டத்தில் இடமில்லை.
சர்வதேச சட்டத்தின் முன் யாவரும் சமம்.. இதை சீனாவும் இந்தியாவும் மறுக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.
ஒல்லாந்து ஹேக் போர்க்குற்ற நீதிமன்றில் சலபொடான் மிலேசெவிச்சிற்கு போர்க்குற்ற மரண தண்டனை விதிக்கப்பட்டதை பார்த்த பிறகும் சிறீலங்காவில் அது மீறப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச சட்டத்தை கடுகளவும் கணக்கில் எடுக்காத செயல் என்பதை இந்தியாவும் சீனாவும் உணர்வது அவசியமல்லவா..?
அலைகள்
8000 பேரைக் கொன்ற போர்க்குற்றவாளி கைது... நமக்கும் நீதி கிடைக்குமா...?
பதிந்தவர்:
தம்பியன்
29 May 2011



சிங்கள இனவெறிகொலைஞனை இத்தனை காலம் விட்டு வைத்திருந்தது ஐ.நா செய்த குற்றம். உடனடியாக கைது செய்து தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதுவும் விரைவில். உலக நாடுகள் இனிமேலும் இப்படிப்பட்ட தவறுகள் செய்யாதிருக்க இது ஒரு பாடமாக அமையவேண்டும். சிங்களத்திற்கு தமிழர் இன அழிப்பிற்கு உதவிய நாடுகளையும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்.