Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமக்கான நீதியும் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது.

தற்போது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான மாநாடு சுவிஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர்பிய போர்க்கைதி ரட்கோ மிலாட்விஜ் கைது புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்றய புதிய உலகு இனவாத அரசுகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் நம்பிக்கையுடன் ச.ச.முத்து எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது:

முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, இனஅழிப்புக்காக, போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள்.

2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டு மிராண்டித் தனங்களுக்கான நீதி தாமதமாகிக்கொண்டே போகின்றது. தாமதம் என்றாலும்கூட நீதி நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையின் வேர்கள் காய்ந்து போனாலும் இன்னும் பட்டுப்போய்விடவில்லை.

ஐநா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆங்காங்கே எழும்பும் தேசங்களின் குரல்களும், மனிதஉரிமை அமைப்புகளின் வரவேற்பும் இந்த நம்பிக்கையை மிகமிக கொஞ்சமாக துளிர்க்கவைத்துள்ளது. அத்துடன் இந்த மே மாதத்தில் உலக அரங்கின் நீதிமன்றங்களில் மானுடத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடந்த விசாரணைகளும், தீர்ப்புகளும், கைதுஆணைகளும் எமக்கான நீதியும் ஒருநாளில் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது.

எல்லாவிதமான நம்பிக்கைகளும் அற்று நடமாடும் பிரேதங்களாக உலாவும் ஒரு இனத்துக்கு இத்தகைய நம்பிக்கையானது பெரும்அலைகடல் நடுவே உயிருக்கு தத்தளிக்குமொருவனுக்கு கிடைத்த சிறு மரத்குற்றிதான். பற்றிப்பிடிப்போம் இப்போதைக்கு அதனையே.

இந்த மாதம் 12ம்திகதி ஜேர்மன் நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த 91வயதுடைய ஜோன் டெம்ஜனோக்(John Demjanjuk) என்ற உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாஸிப்படை வீரனுக்கு இரண்டாம் உலக யுத்தகாலப்பகுதியில் சொபிபர்(sobibor) தடுப்புமுகாமில் 28060 யூதமக்களை அழித்ததற்கு துணைபோனதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

அதே ஜேர்மனியின் பிராங்போர்ட் நகர நீதிமன்றத்தில் இந்தமாதம் 11ம்திகதி ருவண்டா நாட்டின் வடகிழக்கு பகுதி நகரான 'மவும்பா' நகர தலைவரான (mayor of mavumba) Rwabukombe என்பவர்மீதான இனப்படுகொலை வழக்கில் முதலாவது சாட்சி தானும் தனது ருட்சி இனத்தவர்களும் எப்படி இவரால் திட்டமிட்டு சிறைவைக்கப்பட்டோம் என்றும் சித்திரவதை செய்யப்படடோம் என்றும் தனது மக்கள் எப்படி இனஅடிப்படையில் கொல்லப்பட்டார்கள் என்றும் சாட்சியமளித்து இப்போதே தீர்ப்பை ஓரளவுக்கு உறுதிசெய்துள்ளார்

உலகின் எந்தப்பாகத்திலும் நடைபெற்ற, நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் உரிமை ஜேர்மனியின் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப்போலவே அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் அமெரிக்க பிரஜையாக மாறியிருக்கும் ருவண்டாவில் ஆசிரியராகவும், ஆலை ஒன்றின் அதிபராகவும் இருந்த hutu இனத்தை சேர்ந்த லாசர கொபயகா(Lazara Kobagaya) என்பவர் 1994ல் நடைபெற்ற ருட்சி இனமக்கள் மீதான இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டதை அமெரிக்க குடியுரிமை விண்ணப்பபடிவத்தில் தெரிவிக்காமல் (செய்தவன் ஒப்புக்கொள்ளுவானா என்ன) விட்டதற்காக கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்படுகின்றான்.

மிகநீண்ட இனஅழிப்பு வழக்கொன்றில் தன்சானிய நாட்டில்அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தால் (international criminal tribunal for Rwanda-ICTR) இந்த மாதம் 17ம்திகதி ஒகஸ்டின் பிசிமுங்கா (Augustin Bizimungu) என்ற இனப்படுகொலையாளிக்கு 30வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவனே 1994களில் ருவண்டாவில் இனப்படுகொலை நடைபெற்றபொழுதுகளில் தலைமை இராணுவதளபதியாக இருந்துள்ளான். இவனுடன் மேலும் மூன்றுமூத்த ராணுவ முன்னாள் தளபதிகளும் இதே நாளில் தண்டிக்கப்ப்டுள்ளனர்.

அதைப்போலவே இம்மாதம் 16ம்திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக, அவர் மானுடத்துக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக அவரை கைதுசெய்யவேண்டும் என்ற மனுவை ஹொலண்டில் அமைந்திருக்கும் சர்வதேச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், திட்டமிட்டு, பாரிய அளவில் பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்ற எந்த பெயரில் இருந்தாலும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் எங்காவது தண்டிக்கப்படும்போதும், நீதிவிசாரணைக்கு உள்ளாக்கப்படும்போதும் 'எங்களுக்கு யாருமே இல்லையா' என்ற முள்ளிவாய்க்காலின் இறுதிக்கதறலுக்கு எப்போது நீதிகிடைக்கும் என்ற ஏக்கமே எழுகின்றது.

இத்தகைய வெறும் ஏக்கம் மட்டுமே சிங்களத்தின் இனப்படுகொலையாளிகளை தண்டித்துவிடப்போதுமானது அல்ல. ஐநா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முதல்கட்டமாக சிங்களம் நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களை வழங்க புலம்பெயர் சமூகம் முயலவேண்டும்.

இன்னுமொரு முனையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலைதான் என்ற நிரூபணங்களை சர்வதேச சமூகத்தின் முன் வைப்பதற்கு ஏற்ற அனைத்து செயற்பாடுகளையும் தமிழர்அமைப்புகள் அனைவரும் காலத்தில் கூர்மைபடுத்த வேண்டும். இதற்கான பாதை மிக நீண்டதாககூட இருக்கலாம். ஏனென்றால் எண்ணெய் பீறிடும் பாலைவனத்தில் இருந்து நீளும் நீதிக்கான குரலுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டுவிடும்.

எங்களைவிட வளம்மிகுந்த மண்ணில் இருந்து அளிக்கப்படும் நீதிகோரிய மனுவுக்குதான் எம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் உரிமை வழங்கப்பட்டுவிடும். பாராபட்சம் நிறைந்ததும், ஓரவஞ்சனை கொண்டதும், பாராமுகம் கொண்டதும்தான் சர்வதேச நீதி அமைப்பு.

ஆனாலும் எமக்கு இப்போது அதனைவிட்டால் வேறு வழியில்லை. எமது மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படபோகிறார்கள் என்று தெரிந்தும், எமது கூட்டம், கூட்டமாக கொல்லப்படுகின்றபோதும் பார்த்துக்கொண்டிருந்த சக்திகளிடம்தான் நாம் எமக்கான நீதியை கேட்டுநிற்கின்றோம் என்பதை மறக்கக் கூடாது.

யாரிடம் சென்றுதன்னும் மகிந்தகும்பலை கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும். மகிந்தகும்பல் கூண்டில் ஏற்றப்படுவது என்பதும் தண்டிக்கப்படுவது என்பதும் இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுதராது என்பதும், இறுதிநேரத்து வதைகளின் வலிகளை ஆற்றாது என்றாலும் அந்த மக்கள் எதற்காக அந்த மண்ணில் நின்றார்களோ, அந்த மண்ணில் போராடினார்களோ அந்த தாயகவிடுதலைக்கான முதல் திறவுகோலாக மகிந்த கும்பல் தண்டிக்கப்படப் போவது அமையும்.

நீதியின் கனத்த சட்டப் புத்தகங்களிலும், புரியாத சரத்துகளிலும் விறைத்துநிற்கும் வாக்கியங்களைவிட முள்ளிவாய்க்கால் பொழுதில் எமது மக்கள் வடித்தகண்ணீர் அதிக வலிமையானவை. அவை என்றாவது ஒருநாள் இதற்கு பதில்பெற்றே தீரும்.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரற்றே செல்வத்தை தேய்க்கும் படை'

ச.ச.முத்து
ilamparavai@hotmail.com

0 Responses to எப்போது மகிந்தாவின் முறை வரும்: ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com