தமிழின அழிப்பின் 2ம் ஆண்டு நினைவு நாளான மே 18 சிறிலங்கா அரசின் போர்க்குற்ற மீறல்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் சபதம் எடுத்து கனடியத் தமிழர் தேசிய அவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் போர்க்குற்ற நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வு மே மாதம் 18.2011 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு ரொறன்ரோ நகர மத்தியில் அமைந்துள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத்தின் முன்பாக குயின்ஸ் பார்க் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியலாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினா.; அத்துடன் சிறிலங்கா அரசின் போர்க்குற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இறுதி நிகழ்வாக தீப வணக்க நிகழ்வு இடம்பெற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஓன்ராரியோப் பாரளுமன்ற உறுப்பினர் கிளன் மூறே பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல்,அமைதி வணக்கம் , மலர் வணக்கம்; இடம்பெற்றன.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களான பொப் றே, மைக்கல் புறு, ராதிகா சிற்சபைஈசன், மனித உரிமைகள் சட்டவல்லுநர் குர்பற்வன்ற் பனூன், மாநகரசபை உறுப்பினர் லோகன் கணபதி, ஜேம்ஸ் கிளாக்(Canadian Peace Alliance), பிரியந் (தமிழ் இளையோர் அமைப்பு), சன்டி கட்சன்(Ontario Chairperson,Canadian Federation of Students), வனிதா இராயேந்திரம்(நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயகவாதி), கிருஸ்ணா சரவணமுத்து(கனடியத் தமிழர் தேசிய அவை பேச்சாளர்) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
அத்தோடு எழுச்சிப் பாடல்களும் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.
நேற்றைய தினம் மழை நாளாக இருந்தபோதும் வேலை நாளாக இருந்தபோதும் முதியோர், இளையோர், குழந்தைகள் என வயது வேறுபாடின்றி உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்
நேற்று காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தபோதும் நிகழ்வு தொடங்கி முடியும் வரை மழை பெய்யவில்லை. இறுதியாக மக்கள் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்திய வேளை வானமும் கண்ணீர் விடுவது போல் மழை தூறியது. இயற்கை தனது கடமையினை செய்தமையானது மக்களை உணர்வு மேலிடச்செய்தது.
பல தமிழ் வர்த்தக நிலையங்கள் தாமகவே நேற்று மாலை தமது வர்த்தக நிலையங்களை மூடி இந்நிகழ்வுக்கு ஒத்தாசை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடியத் தமிழர் தேசிய அவையினருடன் ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழங்கள் மற்றும் இளையோர் அமைப்பினர் என வயது வேறுபாடின்றி தமது உறுவுகளின் இழப்பினை நினைந்து உணர்வு பூர்வமாக நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆரம்பத்திலிருந்து முடிவுறும்வரை பங்காற்றினர். இறுதியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு 9.30 மணியளவில் போர்க்குற்ற நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.



0 Responses to கனடா ரொறன்ரோ- ‘போர்க்குற்ற நாள்’ நிகழ்வு