முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக சென்னை ஐகோர்ட்டில் வாதாட வந்திருக்கிறார் இந்தியாவின் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி.
அவர் செய்தியாளர்களிடம், ‘’முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்ற முடியும்’’ என்று கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி அவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பேரறிவாளன் சார்பில் வக்கீல் தடா சந்திரசேகரன், சாந்தன், முருகன் சார்பில் வக்கீல் வைகை ஆகியோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு வக்கீல் தடா சந்திரசேகரன் ஆஜராகி, ’’தூக்கு தண்டனை பிரச்சினை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்காக ஏற்கப்படுவதாகவும், விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் ஐகோர்ட்டில் குழுமியுள்ளனர்.



0 Responses to மூவரையும் தூக்கில் இருந்து காப்பாற்ற முடியும்: ராம்ஜெத்மலானி