Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 18 ஆவது கூட்டத்தொடரை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தொடர் குறித்து சிறீலங்கா அரசும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தமது நகர்வுகளை ஆரம்பித்துவிட்டன.

கடந்த மே மாதம் இடம்பெற்ற 17 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நாவின் அசைவுகளை இந்திய மத்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. தான் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் தானே விசாரணைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த மேற்குலகம் தமிழ் மக்களை ஏமாற்றவும் முனைந்திருந்தது.

ஆனால் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு விசாரணைக்குழு அல்ல என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழர்கள் முட்டாள்கள் என மேற்குலகம் கணக்குப் போட்டது தான் தவறானது. எனினும் மேற்குலகத்தின் இந்த ஏமாற்றுத்தனத்திற்கு தமிழகத்தின் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சாட்டை அடியாக வீழ்ந்திருந்ததுடன், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளரையும் சென்னைக்கு இழுத்திருந்தது.

ஆனால் அதனை ஈடுசெய்து சிறீலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்த இந்திய அரச தலைவர் தனது அடுத்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தார். அதுதான், ராஜீவ் காந்தியின் வழக்கில் சோடிக்கப்பட்டு குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் மீதான து£க்குத் தண்டனையின் உறுதி. இதனை நாம் நீதிக்குப்புறம்பான படுகொலை எனக் கூறினாலும் தவறில்லை. எனினும் அதனையும் ஈழத்தமிழ் மக்களினதும், தமிழக மக்களினதும் ஒருங்கிணைந்த முயற்சியும், செங்கொடியின் தியாகமும் தகர்த்துவிட்டது.

எனினும் தமிழினத்திற்கு எதிராகவே தனது வளங்கள் அனைத்தையும் விரையம் செய்துவரும் இந்திய மத்திய அரசும், அதற்கு துணைபோகும் தமிழின விரோதிகளும் ஓயப்போவதில்லை. ஆனால் அவர்களின் அடுத்த நகர்வுக்கு முன்னர் தமிழினம் தனது அடுத்த நகர்வை துரிதப்படுத்த வேண்டும். அதற்கான பாதையாக இந்த மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

செப்டெம்பர் மாதம் வரையிலும் தவணை கேட்டே, மே மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து சிறீலங்காவை இந்தியா காப்பாற்றியிருந்தது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தில் முன்வைக்கப்போவதாக அமெரிக்காவும் தன்னைத் தானே ஆறுதல் படுத்தியிருந்தது. தற்போது, நவம்பர் மாதம் வரையிலும் தமது அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என சிறீலங்கா அரசு எழுதிக்கொடுத்த அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வாசித்துள்ளது. சிறீலங்காவை மிரட்டப் போவதாக புறப்பட்ட அமெரிக்காவின் தென்ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும், அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் விமானம் புறப்படவில்லை என பின்னடித்துள்ளார்.

ஆனால் அனைத்துலக தகவல்களின்படி அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் பறந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பிளேக் புறப்பட்ட விமானம் மட்டும் ஏன் பறக்கவில்லை என்பது தான் புரியாதா புதிராக உள்ளது. சிறீலங்காவை மிரட்ட
வேண்டாம் என பிளேக்கை தடுத்தது யார்? மீண்டும் இந்திய மத்திய அரசா? அவ்வாறானால், செப்டெம்பர் மாதம் சிறீலங்கா மீது அழுத்தங்கள் ஏற்படுத்தப்படும், தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என அமெரிக்க அதிகாரிகள் போட்ட கூச்சல்கள் எல்லாம் வெற்று வேட்டுக்களாகப் போகின்றனவா? எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் அதனைத் தான் கூறுகின்றன.

ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் மறுபடியும் சிதறடிக்கப்படலாம், நாம் மீண்டும் ஏமாற்றப்படலாம். ஆனால் இந்த ஏமாற்றங்களை தகர்த்து, சிறீலங்கா அரசின் மீதான அழுத்தங்களை ஏற்படுத்தி எமது உரிமைகளை பெறுவதற்கான சிறந்த தெரிவாக தமிழகத்துடன், ஈழத்தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வலுவான உறவுதான் உள்ளது. சிறீலங்கா அரசுக்கு எதிராக தனியாக போராடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தமிழகத்தின் உதவிகள் இன்றியமையாதது. தாயகத்து அரசியலை பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிகைள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பாகவோ, சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முனையவில்லை.

சிறீலங்கா அரச படையினரின் உதவியுடன், வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது கிறீஸ் பூசப்பட்ட பூதங்களை ஏவிவிடும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை கூட முழுமையாக எதிர்க்கமுடியாத அடிபணிவு நிலையில் கூட்டமைப்பு உள்ளபோது, அவர்களால் எவ்வாறு அரசியல் உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து பேசமுடியும்? கிறீஸ் பூதங்கள் குறித்து காகித அறிக்கைகளை வெளியிட்டுவரும், கூட்டமைப்பு இது தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசப்போவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் சிறீலங்கா அரச படையிரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுடன் பேசியதாக இதுவரை தகவல்கள் இல்லை. ஏன்? இதற்கான விடையை தமிழ் மக்கள் தான் தேடவேண்டும். தமிழ் மக்கள் அனுபவிக்கும் வன்முறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கே அறிக்கை வெளியிடுவதன் மூலம் நாம் எதனைச் சாதிக்க முடியும்? எனவே தான் புலம்பெயர் தமிழ் மக்கள் இந்திய மத்திய அரசை புறம்தள்ளுவதுடன், தமிழகத்தை தம்முடன் இணைத்துக்கொள்வது, தற்போதைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வாக அமையும் என கணிக்கப்படுகின்றது.

மீன் பிடிக்கும் றோலர் படகை நவீன வேவுப் படகாக மாற்றியமமைத்து பாக்கு நீரிணையினுள் புகுந்து இந்தியாவின் ஏவகணை மற்றும் அணுவாயுத இருப்பிடங்களை துல்லியமாக அறிந்துகொண்ட சீனாவின் நடவடிக்கையும், அதற்கு தனது பூரண ஆதரவுகளை வழங்கிய சிறீலங்காவின் நடவடிக்கையும் மிக முக்கியமானவை.

தனது எஃப்-7 ரக போர் விமானங்களுக்கு தேவையான வெடிகுண்டுகளை கொண்டுவந்த சிறீலங்கா வான்படையின் அன்ரனோவ்-32 ரக விமானம் சென்னையில் தரையிறங்கியதிலும் சில இராணுவ இரகசியங்கள் அடங்கியுள்ளன. போர் நிறைவடைந்த பின்னர் எஃப்-7 விமானத்திற்கு தேவையான வெடிகுண்டுகள் எதற்கு? மன்னார் கடலில் நடைபெற்ற ‘கடற்காகம்’ என்ற சிறீலங்கா அரசின் படைத்துறை பயிற்சிகள் திருமலையில் தற்போது நடப்பது ஏன்? தற்போதுள்ள சிறீலங்கா இராணுவம் எந்த நாட்டின் இராணுவமான தொழிற்படுகின்றது? பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் தனது பாதுகாப்பான எல்லை என கணிப்பிட்ட தென்பகுதியில் 300,000 அன்னிய இராணுவம் மறைமுகமாக குவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் இந்த இராணுவமயப்படுத்தல்களுக்கு எதிராக 1987 களை போல இந்திய இராணுவத்தால் ஒரு உள்நுழைவை வருங்காலத்தில் ஏற்படுத்த முடியுமா? என்றால் அதுவும் தற்போது கேள்விக்குறியானதே.

ஓர் உறைக்குள் இரு கத்திகள் ஆகாது என்ற சீனாவின் தத்துவம் மெல்ல மெல்ல நடைமுறைச்சாத்தியமாகிவருவது கண்கூடு. ஆனால் இதனை விட்டுப்பிடிப்பதில் தான் மேற்குலகம் அதிக கரிசனை காட்டும், தமிழ் மக்களும் இதனை அனுமதிப்பதன் ஊடாகத் தான் சிறீலங்கா அரசின் வன்முறைக் கட்டுக்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

0 Responses to சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com