சிறீலங்காத் தூதரகம் மற்றும் சிறீலங்காவின் ஆதரவு அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடியப் பாராளுமன்றத்தில் சனல் 4 இன் ''இலங்கையின் கொலைக்களம்'' விவரணத் திரைப்படம் நேற்று இரவு காண்பிக்கப்பட்டது
மாலை 6 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்ச்சி இரவு 9.05 வரை நீண்டு சென்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறீலங்கா பற்றிய உண்மை முகத்தை தாங்கள் கண்ணுற்றதாகத் தெரிவித்துச் சென்றனர்.
முதலில் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்துப் பேசிய மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான துணை இயக்குனர் திருவாட்டி எலைன் பியர்சன் அவர்கள் சிறீலங்கா தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் மேற்கொண்டு வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதாக சர்வதேசத்திற்கு காட்டும் வகையில், உள்ளக விசாரணைக் குழுக்கள் பலவற்றை இதுவரை அமைத்துள்ளதென்றும், ஆனால் அந்தக் குழுக்களில் ஒன்று கூட முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டதான வரலாறு இல்லையென்றும், எனவே இந்த யுத்தக் குற்ற மீறல்கள் குறித்து நியாயமான சர்வதேச விசாரணை தேவையென்றும் தெரிவித்தார்.
இதேவேளை கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இந்த நிகழ்வை பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்த பற்றிக் பிரவுண் உரையாற்றுகையில், தான் இந்த நிகழ்வை நடத்தினால் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அளவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் தான் அதனைக் கருத்திலெடுக்காமல் இந்த நிகழ்வை நடத்தியதாகத் தெரிவித்தார்.
இதேபோன்றதொரு விசமத்தனமான பிரச்சாரம் இந்த நிகழ்விற்கு முழு ஒத்தாசையும் வழங்கிச் செயற்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் கனடிய மனிதவுரிமை மையம் ஆகிய இரு அமைப்புக்கள் மீதும் சிறீலங்காவை அடிபற்றிச் செல்லும் ஒருபிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட போதும் மேற்படி அமைப்புக்கள் இதனை முறியடித்து இந் நிகழ்வு பற்றிய விழிப்பூட்டலில் ஈடுபட்டதோடல்லாமல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்துப் பேசிய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே சிறீலங்காவில் தமிழர்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய உண்மைகளை தான் தற்போது உணர்ந்து கொண்டதாகவும் அதற்காகத் தான் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இவர் கனடா-சிறீலங்கா பாராளுமன்றக் குழுவின் முன்னைநாள் தலைவர் என்பதும் தற்போது மனமாற்றம் கண்டு தமிழர்களின் நியாயப்பாட்டிற்காக குரல்கொடுக்க முன்வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேசிய ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கப்போகும் இந்தக் கொலைக்களம் தனது உறவினர்களிற்கு, தனது உற்றாரிற்கு, தனது நண்பர்களிற்கு நேரடியாக நடந்த ஒன்று என்றும் இது தன்னை மிகவும் பாதித்த ஒரு விடயம் என்றும் இதற்காக கனடாவின் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கனடியத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் அதன் துணைத்தலைவரும் மார்க்கம் பிரதேச கல்விச்சபை உறுப்பினருமான யுவனிதா நாதன், அதன் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை உள்ளிட்ட குழுவினரும், சி.எம்.ஆர் ஊடகம் சார்பில் ராகவன் பரஞ்சோதியும் பற்றிக் பிரவுணின் உற்ற நண்பனும், அப்பழுக்கற்ற சமூகசேவையாளருமான ஆரன் சுரேஸ்குமாரும் இந்த நிகழ்வில் தமிழ்ச் சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசிய கனடியத் தமிழ்க் காங்கிரஸிடம் தாங்கள் நிச்சயமாக தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக்கொணரும் வகையில் உதவுவதாகவும், சிறீலங்காவின் யுத்தக்குற்ற மீறலை சர்வதேச விசாரணையாக்குவதற்கு முயலும் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் நடவடிக்கைகளிற்கு ஒத்தாசை புரியத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துச் சென்றனர்.
சிறீலங்காவின் தூதரக மற்றும் அவர்களிற்கு வேறு வழிகளில் துணைபோகும் சக்திகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சுமார் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடா வாழ்த் தமிழர்கள் சார்பிலான உளமார்ந்த நன்றியறிதலை கன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் அவர்களிற்கு நேரடியாகத் தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடாப் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்ட ''இலங்கையின் கொலைக்களம்''
பதிந்தவர்:
தம்பியன்
29 September 2011



0 Responses to கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடாப் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்ட ''இலங்கையின் கொலைக்களம்''