Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி, டோர்ட்முண்ட் நகரில் 27.11.2011 அன்று தமிழர்களின் தாயகத்துக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் பதித்து நினைவு கூரும் முகமாக மாவீரர் நாள் 2011 மிக எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் 8000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் தேசியக் கடமையை நிறைவேற்றினர்.

தேசிய மாவீரர்நாள் நினைவு வணக்க நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடரினை பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார்

ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை மாவீரர், வீரவேங்கை திருமாறன் அவர்களின் தாயார், திருமதி. தெய்வேந்திரம் பவானியம்மா அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனை அடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை மாவீரர் லெப்டினன்ட் மேகலா அவர்களின் சகோதரி, திருமதி. நந்தகுமாரி சிவராயா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது .

அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் இணைந்து தமிழீழம் மலர அயராது தேசியத் தலைவரின் உறுதியோடு தளராமல் பயணிப்போம் என உறுதிமொழி கூறினர்.

மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தமது தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்கமேடையில் தமிழீழம் இசைக்குழு, இராக வேங்கை இசைக்குழுவின் இசைவணக்கம், சிறுவர் உரை, கவிதை, எழுச்சி நடனங்கள், நாடகம், நாட்டிய நாடகம், மாவீரர் வெற்றிக்கிண்ணப் பரிசளிப்பு, இறுவட்டு வெளியீட்டு நிகழ்வுகள், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், வை.கோ ஆகியோரது மாவீரர்நாள் செய்திகள் ஒளிவடிவில் ஒலிபரப்பட்டமை, யேர்மனியில் கைதுசெய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர்களுக்கான மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கான கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் சிறப்பாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றன.

சிறப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், மனித நேயப்பணியாளர்கள் யேர்மன் அரசாங்கத்தால் கைது செய்யப்படதை தொடர்ந்து அதற்கு எதிராக தமது வழக்கை வெற்றிகரமாகக் கொண்டு சென்று தமது விடுதலைக்கு காரணமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழுவுக்கு சிறப்பான கௌரவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது .

அதை தொடர்ந்து மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் இவ்வழக்குத் தொடர்பாக வாதிட்ட வழக்கறிஞர்களின் இணைப்பாளர் வழக்கறிஞர் திரு Nagler அவர்கள் இவ்வழக்குத் தொடர்பாகத் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அத்தோடு இவ் மாபெரும் நினைவெழுச்சியில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்திருந்த புதிய பார்வையின் ஆசிரியரும், தமிழக முதல்வரின் தோழி சசிகலா அவர்களின் துணைவரும், ஐயா பழ. நெடுமாறன், திரு. வை. கோ, த. பாண்டியன் போன்ற தமிழீழ ஆதரவுத் தலைவர்களோடு இணைந்து தமிழீழ மலர்வுக்காய் உழைத்து வருபவரும், தஞ்சாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற நினைவிடக் கட்டுமானப் பணிகளைப், பழ. நெடுமாறன் அவர்களோடு சேர்ந்து முன்னெடுத்து வருகின்ற தமிழ் உணர்வாளரும், தமிழகத்திலிருந்து வருகை தந்தவருமான, திரு. ம. நடராஜன் அவர்களும்,பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும் , சிறப்புரைகள் வழங்கினர்.

மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற தனித் தமிழீழமே தமது நோக்கு எனும் பாதையில் பயணிக்கும் வகையில் இப் புனித மாதத்தில் யேர்மன் சட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை 2011 றாம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சந்திப்புகளின் மற்றும் வேலைத்திட்டங்களின் விபரங்களை "தகவல் மையம்" ஊடாக மக்களுக்கு தெரிவித்தனர் .

இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் " பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.











0 Responses to யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com