சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
லிபியாவில் இடம்பெற்ற பாரிய கொலைகள் தொடர்பில் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், நடவடிக்கை எடுத்தது போன்று, இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றியும் கவனம் எடுக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் முன்னைய தலைவர் கேணல் கடாபியின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் சிறிலங்கா அரசுத் தலைவர். அவரையே நீங்கள் தற்பொழுது சந்திக்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம, லிபிய மக்களுக்கு எதிரான கொலைகளைத் தடுப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சிகளைத் தடுக்க முயன்றவர்களில் ஒருவராக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இருந்தவர் என்பதனையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கட்டார் மன்னருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
தங்களது முயற்சியினால் லிபியாவில் ஆயிரக் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது போல் சிறிலங்கா தொடர்பிலும் அதேநிலைப்பாட்டுடன் தலைமைத்துவப் பணியினை மேற்கொள்ளல் வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐ. நா. மனித உரிமைப் பேரவையினுடாக லிபியாவில் அனைத்துலக விசாரணைக்கான ஆணைக்குழு ஒன்றினை நிறுவுவதில் வெற்றி கிடைத்ததற்கு தங்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களே வழி வகுத்தன.
அதே வகையில், 2012ஆம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரிலும் சிறிலங்கா பற்றிய இத்தகைய அனைத்துலக விசாரணைக்கான ஆணைக்குழு ஒன்றினை நிறுவும் முயற்சிக்கு நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
நீங்கள் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தின் போது தமிழ் மக்களின் இன்னல்களையும் துயரங்களையும் கேட்பதற்கு வாய்ப்பிருக்காது. ஏனெனில், எமது மக்களின் குரல்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. மாறாக, தமிழ் மக்களைப் பாரிய அளவில் கொன்று குவித்த அதே அரச படைகளே தங்களுக்கு அணி வகுப்பு மரியாதைகளை வழங்குவார்கள் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஆங்கிலத்தில் பார்வையிட...
சிறிலங்காவுக்கு பயணித்திருக்கும் கட்டார் மன்னருக்கு தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோள்!
பதிந்தவர்:
தம்பியன்
17 January 2012



0 Responses to சிறிலங்காவுக்கு பயணித்திருக்கும் கட்டார் மன்னருக்கு தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோள்!