சகோதர பாசத்தில் இருந்து உற்பத்தியாவதுதான் இறைநேசம் என்று எடுத்தியம்பிய தமிழ் நதி..
சைவக் குடும்பத்தில் பிறந்த அப்பர் சுவாமிகளுக்கு பிறந்தபோது பெயர் மருணீக்கியார். பின்னர் அவர் சமண சமயத்திற்கு மாறி அம் மதத்தின் தலைமைக் குருவாக இருந்தபோது பெயர் தர்மசேனர், மதம்மாறி சிவனின் தொண்டனானபோது அவருக்கு பெயர் திருநாவுக்கரசர்.
அவருக்கு திருஞானசம்மந்தர் சூட்டிய பெயர் அப்பர். தந்தை போன்று பெரியவர் என்பது இப்பெயரின் பொருள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கிற்கு அமைவாக அவருடைய நாக்கில் இருந்து வந்த தமிழ் இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரசக்தி மிக்க தமிழாக இருந்தது.
அவருடைய தமக்கையார் திலகவதியார் போரில் கணவனைப் பறிகொடுத்தவர். ஆலயங்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்தவர். போரின் கொடுமையையும், அதனால் பாதிக்கப்பட்ட தமக்கையையும் ஆதரிக்க எண்ணினார். சைவத்திற்கு மாறி தமக்கையாருடன் இணைந்து ஆலயத் தொண்டு செய்து நீண்டகாலம் வாழ்ந்தவர் நம் அப்பர் சுவாமிகள்.
அப்பரை கடந்த ஆயிரம் வருடங்களாக உலகம் சேக்கிழாரின் கண்களைக் கொண்டுதான் பார்த்து வருகிறது. ஆனால் அப்பர் சுவாமிகள் என்ற அந்த அழகிய தமிழ் கிளியையும் பெரிய புராணம் என்னும் கூட்டை விட்டு திறந்து பறக்க விட்டால், அவர் மிகப்பெரிய சமுதாயப் புரட்சியாளர் என்ற உண்மை தெரியும், நாம் மனம் மாறுவோம்.
திருநீறும், உருத்திராட்சமுமாகக் காட்டி ஒரு புரட்சிக்காரனை புதிய கோணத்தில் சொல்லத் தவறிவிட்டோமே என்ற வேதனையும் மனதில் ஒரு சுற்று வந்து போகும்.
அப்பரை ஏன் ஒரு சமூகப்புரட்சியாளர் என்று கூற வேண்டும்.. இதோ காரணங்கள்..
சமஸ்கிருதத்தால் முடியாத சாதனைகளை எல்லாம் தமிழால் செய்ய முடியுமென செய்து காட்டியவர்.
இனிய, தூய தமிழால் பாடினால் கருங்கல்லையும் கடலில் மிதக்கச் செய்யலாம் என்று காட்டி, உலகில் தமிழுக்குள்ள சிறப்பு வேறெந்த மொழிக்கும் கிடையாது என்பதை தன் தமிழ் நாவால் உணர்த்திய திருநாவுக்கரசர்.
தமிழ் மன்னர்களை நாம் சங்ககாலத்தில் இருந்தே வீரர்களாகவும் கொடை வள்ளல்களாகவும் போற்றுகிறோம். ஆனால் அரசியல் அதிகாரம் கைக்கு கிடைத்துவிட்டால் அடுத்த கணமே தமிழன் சர்வாதிகாரியாக மாறிவிடுவான், இது அவனுடைய பிறவிக்குணம். அனைத்து தமிழ் சர்வாதிகாரிகளையும் வீதிக்கு வந்து துணிந்து எதிர்த்த ஜனநாயகத்தின் தமிழ்க்குரல் அப்பர்.
மதம் மாறியவனும் குப்பையில்தான் மதம் மாறாமல் சைவத்தில் இருப்பவனும் குப்பையில்தானென ஓடையும், செம்பொன்னையும் ஒன்றாக அள்ளி குப்பையில் வீசிக்காட்டிய துறைபோந்த சமரசவாதி.
சைவத்தின் மடைத்தனங்களுக்கு எதிராக ஒரு சமணனாக இருந்து போராடியவர். அதுபோல சமண, பௌத்தத்தின் முட்டாள்தனங்களுக்கு எதிராக சைவத்தில் இருந்து போராடியவர். அனைத்து மத ஆசாடபூதிகளுக்கும் எதிராக இறுதிவரை போராடி, போராட்டமே வாழ்வாக வாழ்ந்த சமுதாயப் போராளி.
அது மட்டுமா..?
தமிழன் நடராஜனின் நடனத்தை காண்பதே வாழ்வின் இறுதி இலட்சியமென கலைக்காகவே வாழ்ந்து முடித்த மாபெரும் கலைநேசன்..
தண்ணீரில் கல்லைப் போட்டால் அதற்கு சமமான நீர் வெளியே கொட்டுப்படும் என்று கண்டறிந்த விஞ்ஞானி ஆக்கிமிடீசிற்கு முன்னரே, தண்ணீரை உள்ளே இழுத்துப் போட்டால் கல்லையே மிதக்கச் செய்யலாமெனக் கூறிய விஞ்ஞானக் கற்பனையாளன். இப்படி.. இப்படி… அப்பர் சுவாமிகளைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுது ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்மந்தமான விளைவுகள் உடனே ஏற்படும். – இது அறிஞர் மார்க் டைவன் கூறிய கருத்து.
உள்ளத்தில் உள்ளதை மாற்றமின்றி அப்படியே தமிழ் படுத்திய தமிழ் மந்திரங்களே அப்பர் சுவாமிகள் பாடிய 4900 தேவாரங்களுமாகும். மார்க் டைவன் கூறியது போல வார்த்தைகள் சரியானால் கல் மிதக்கும், இறந்த உயிர் பிழைக்கும். இதை மார்க் டைவன் போன்றவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியவரே நமது அப்பர் சுவாமிகள்..
எப்படி.. இதோ.. அவர் வாழ்வில் இருந்து சில சம்பவங்கள்…
அப்பருக்கு விருந்து படைக்க மெய்யடியார் அப்பூதியடிகள் முடிவு செய்கிறார். அதற்காக வாழையிலை வெட்ட சென்ற மெய்யடியாரின் மகனுக்கு பாம்பு தீண்டிவிட்டது. சிறுவனை பாயில் சுற்றி வைத்துவிட்டு, கவலையை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டே அப்பருக்கு அந்தத் தம்பதியர் உணவு பரிமாறுகிறார்கள்.
மெல்ல முகர்ந்தால் அனிச்சம் பூ வாடிவிடும்… ஆனால் முகம் திரிந்து நோக்கினால் விருந்தினர் மனம் கோணிவிடுவர் என்பார் வள்ளுவர். அவர்களுடைய கவலையால் கோணிய முகத்திலேயே சிறுவனுக்கு பாம்பு தீண்டிய செய்தியை வாசித்துவிடுவார் அப்பர் சுவாமிகள்.
உடனடியாக இனிய தமிழிசையில் பாடுகிறார்… சிறுவனின் உடல் மெல்ல அசைகிறது.. அரவம் தீண்டி அடங்கிக் கிடந்த உயிர் அந்தத் தமிழிசை கேட்டு தாளமிடுகிறது.. சிறுவன் இறக்கவில்லை… அவனை உயிர்ப்பிக்கிறது அப்பரின் தேவாரம்..
அடங்கிய உயிரை உயிர்ப்பிக்கும் தமிழ் இசை என்பதற்கு இது ஓர் உதாரணம். மகுடி சத்தத்திற்கு பாம்பு வந்து விஷத்தை உவிவது போன்ற திரைப்படக் காட்சி தப்பு.. பாம்புக்கு காதுகள் கிடையாது.. அதற்கு புன்னாகவராளி இராகமும் கேட்காது.. பூம் பூம் மாடுபோல வெறுமனே மகுடியை பார்த்து தலையை ஆட்டுவதுதான் பாம்பாட்டம்.. பாம்மையும், மகுடியையும் தப்பாக இணைத்து அப்பரின் தமிழை அசிங்கப்படுத்திவிடக்கூடாது.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை போன்ற பெரும் நாவல்களை எழுதிய பேராசிரியர் கல்கி தனது சிவகாமியின் சபதத்தில் நாவுக்கரசர் தமிழின் வலிமையை ஓரிடத்தில் காட்டுவார்.
நடனத்திலே துறைபோந்த சிவகாமி அப்பரின் தேவாரத்திற்கு அபிநயம் பிடித்ததை விளக்கி அவளையே உலகின் அதி உயர்ந்த நடனத்தாரகை என்று உச்சிமேல் வைத்து போற்றுவார்.
அப்பரின் தேவாரத்தில் சொல்லப்பட்ட தமிழை ஒரு நடனத்தாரகையின் உள்ளம் விளங்கி அபிநயம் பிடிக்க முடியுமானால் அதுவே நடனத்தின் உச்சநிலை, தெய்வீக நிலை என்றும் கூறுவார்.
தெலுங்கு, கர்நாடக சங்கீதங்களை இசைத்து நடனமாடும் இன்றைய தமிழ் நடனத்தாரகைகள் என்று திருநாவுக்கரசர் தமிழை உள்ளத்தால் உணர்ந்து, பதம் பிடிக்கிறார்களோ.. அன்றுதான் அவர்களுடைய நடனம் நடனமாகும் என்பது கல்கியின் கருத்து.
யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்… என்பது அப்பருடைய குரல். மன்னர்களுக்கும், ஆயுதம் ஏந்தியதால் சர்வாதிகாரிகளானவர்க்கும் பயந்து, தமிழ் புலவர்கள் சமாரம் வீசியது கடந்த இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கியத்தில் அதிகமான பகுதிகளாகும்.
அதிகார வர்க்கத்திற்கு சாமரம் வீசக்கூடாது. எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு சர்வாதிகார ஆணவத்திற்கு எதிராக நிற்பவனே உண்மையான தமிழறிஞன். நமக்கு எதாவது வேண்டுமென்று சுயநலம் வந்தால்தான்; நாம் மற்றவரை எத்திப்பிழைக்க வேண்டும். ஆகவே எல்லாவற்றையும் தூக்கி வீசி, எதுவுமே வேண்டாமென உளவாரப் படையாளியாகி ஆலயத்தை துப்பரவு செய்யும் எளிய தொண்டனாக வாழ்ந்து, அரசியல் அதிகாரத்தை தமிழ் துறவால் வென்று காட்டினார்.
அவர் அரசர்களுடைய சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்த புவியில் நின்று குரல் கொடுத்தது ஏழாம் நூற்றாண்டில்.. கிறீத்தவ மதத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மன்னன் 5ம் சாள்சிற்கு எதிராக மாட்டின்லூதர் குரல் கொடுக்க, புரட்டஸ்தாந்து மதத்தை உருவாக்க அப்பருக்குப் பின் எட்டு நூற்றாண்டு காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.
ஒவ்வொரு ஐரோப்பியனும், ஒவ்வொரு அமெரிக்கனும், ஒவ்வொரு சீனனும் இதை உணரும்படி நாம் செய்ய வேண்டும். தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்வகை செய்வேண்டுமென்று என்று ஒவ்வொரு தமிழனுக்கும் பாரதி இட்ட கட்டளை இது..
ஒவ்வொரு சமயத்தவரும் தமது மதத்திற்கு மாறி வருவோரை தங்கம் என்று போற்றுவார்கள். அதுபோல தமது மதத்தை விட்டு மாறிப்போவேரை பெறுமதியற்ற செங்கல் என்று தூற்றுகிறார்கள். இந்தப் பக்கச்சார்பை செய்யாத மதம் ஏதாவது இன்று இந்த உலகில் இருக்கிறதா… நாம் மனச்சாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.
இந்த உண்மையை அப்பருடன் இணைந்து ஜாதி மதமற்று சுடலையில் ஆடும் சிவன் ஒரு நாள் உலகின் முன் வைத்தான். அப்பர் தனது உளவாரத்தால் ஆலயத்தின் வெளியே இருந்த புற்களை செதுக்கிக் கொண்டிருந்தபோது நிலத்தின் கீழிருந்து செங்கற்கள் வெளி வருகின்றன.
ஒரு கூடையில் அள்ளிச் சென்று குப்பையில் வீசுகிறார்…
சொற்ப நேரத்தில் அதேயளவில் தங்கக் கட்டிகள் புதையலாக வெளி வருகின்றன… அதையும் அள்ளிச் சென்று, செங்கற்களை வீசிய குப்பையிலேயே கொட்டிக் கொண்டிருக்கிறார்.
தங்கத்தை பார்த்ததும் அவர் மனம் மாறவில்லை.. செங்கல்லும் ஒன்றுதான், தங்கக் கட்டியும் ஒன்றுதான் அவைகளில் பேதம் இல்லை… அதுபோல மனிதனும் எந்த ஒரு மதத்தில் இருந்தாலும் அவன் தங்கமாவதில்லை அதுபோல வேற்று மதத்தில் இருந்தால் அவன் வெற்று செங்கல்லாவதும் இல்லை..
கல்லையும், பொன்னையும் பேதமில்லாமல் தூக்கி வீசும் மனமிருந்தால் மதம் எதற்கு.. தங்க மகுடமணிந்து, தங்க வேலும், தங்க சூலாயுதமும், தங்க சிலுவையும் சூடி, இனவாத மதவாத பேதங்களை மனதில் காவி, பொன்னாசை, மண்ணாசை கொண்டலையும் இன்றைய மத உலகம் சிந்திக்க வேண்டிய இடம் இது.
மதமாற்றத்தை போற்றுவோரும், தூற்றுவோரும் இருக்க வேண்டிய இடம் ஆலயங்களும் தேவாலயங்களும் அல்ல குப்பை மேடு..
மதம் மாறியவன் என்பதற்காக இறைவன் அப்பருக்கு உடனடியாகக் காட்சியளிக்கவில்லை.. நாயன்மாரில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் அப்பர். அவரை ஏன் நீண்டகாலம் வாழவைக்கிறார் இறைவன்..
இன்று மதம் மாறியவுடன் தனக்கு ஒரே நாளில் ஞானம் கிடைத்துவிட்டது போல பேசுவான் ஒருவன். தீட்சை பெற்று தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டால் நானே குரு என்பான் இன்னொருவன்.. நீ மதம் மாற உனக்கு வேண்டியது ஒரு நாள்… ஆனால் மனிதனாக மாற உனக்கு உன் வாழ்நாள் போதாது என்பதை அப்பர் சுவாமிகளின் மிக நீண்டகால வாழ்வாலும், கண்ணீராலும் இறைவன் உலக மாந்தருக்கு உணர்த்தினான்.
சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் தன் அண்ணனுக்கு தானே போட்டியாக வரக்கூடாது என்பதற்காக தனது இளவரசன் உடையை கழற்றி வீசினான். மெட்டைபோட்டு, காவி தரித்து, என்றுமே அரச உரிமைக்கு வரமாட்டேன் என்று கூறி, துறவியாக மாறி, சிலப்பதிகாரத்தை எழுதினான். அதன் மூலம் ஓர் அண்ணனுக்கு தம்பியாக வாழும் தியாகத்தை உலக மாந்தருக்கு எழுதிக்காட்டினான்.
அவருக்குப் பின் தன் கூடப்பிறந்த தமக்கைக்காக தான் சமண மதத்தில் வகித்த உயர் பதவிகளை எல்லாம் தூக்கி வீசி, மதம்மாறி தன் அக்காளின் அன்புக்காக வாழ்ந்த தம்பியாகி ஆண் – பெண் சகோதர பாசத்திற்கு குழைவை தந்தவர் எங்கள் திருநாவுக்கரசரே.
உடன்பிறப்பின் பாசத்திலிருந்து பிறப்பதுதான் இறை நேசம் என்ற வாழ்வியலை சொல்லித்தந்தார். இன்று அண்ணனும் தம்பியும் சண்டை இவன் இந்த மதம் அவன் அந்த மதம்… இவர்களிடம் எப்படி வரும் இறை நேசம்… பெற்ற பாசம், உடன்பிறந்த பாசத்திற்கு மேற்பட்டதல்ல சமயம். இதை அப்பரின் மதமாற்றம் தெளிவாக உணர்த்துகிறது.
அரசனுக்கு பணிந்து அவன் ஆணையை ஏற்காத காரணத்தால் சுண்ணாம்பு அறையில் அடைக்கப்படுகிறார்… இப்படி எத்தனை சர்வாதிகாரிகள், எத்தனை சுண்ணாம்பு அறைகள் இந்தப் புவியில்…சிரிக்கிறார்.
கோபமடைந்த மன்னன் அவரை கல்லிலே கட்டி கடலிலே வீசும்படி சொல்கிறான்.. கருங்கல்லில் கட்டி எடுத்துச் சென்று நடுக்கடலிலே வீசுகிறார்கள்..
அன்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதி கடலில் மூழ்கியதைவிட வேகமாக கருங்கல்லுடன் ஆழ்கடலில் அமிழ்ந்து போகிறார்.
அப்போது தமிழோடு இசை பாடல் மறந்தறியாத அவருடைய தமிழ் பாடலை உள்ளம் ஆழ்கடலில் இருந்து ஒலிக்கிறது..
அந்தத் தமிழ்ப்பாடலில் மயங்கி கருங்கல் தாழ்வதற்கு இடம் விட்டு விலகிய அலைகள் அதே வேகத்தில் திரும்பி ஓடி வருகின்றன..
டைட்டானிக் தாழ்ந்தபோது ஆயிரக்கணக்கானவர் ஆங்கிலத்தில் ஆண்டவனிடம் அலறுகிறார்கள்… டைட்டானிக்கால் மிதக்க முடியவில்லை. ஆனால் அப்பர் என்ற ஒருவர் பாடிய தமிழைக் கேட்க கருங்கல் மிதக்கிறது.. அந்தக் கருங்கல்லே ஒரு டைட்டானிக் கப்பலைப்போல கடலில் ஓடி கரையில் ஏறுகிறது..
தமிழால் கருங்கல்லையும் மிதக்க வைக்கலாம் என்று உலகிற்கு சொன்னார் எங்கள் அப்பர் சுவாமிகள். தமிழால் ஆலயத்தில் பூசை செய்ய இயலாது, தமிழில் பாடசாலை நடத்த இயலாது, தமிழ் ஒரு தாசி மொழி, தமிழைப் பேசுவது அவமானம் என்று சொல்வோருக்கெல்லாம் அந்த செந்தமிழ் துறவி, தென்னாடுடைய சிவனுடன் இணைந்து அமைதியாக தந்த சவுக்கடி இது.
இப்படியெல்லாம் சாதனைகளை படைத்தாலும், அவருடைய உள்ளம் விரும்பிய ஒரேயொரு ஆசை சிதம்பரத்தில் சிவனுடைய நடனத்தை பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான். அதைக்காண இயலாத உடலால் தவழ்ந்து போகிறார்.
நடனத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது..
உலகத்தின் ஊஞ்சல் போன்றதே காற்று மண்டலம், அது முடிவடையும் உச்சத்தில் நடராஜரின் நடனத்தைபோல ஒற்றைக் காலில் ஆடிக் கொண்டிருக்கிறது. போர்மூடா முக்கோணத்தில் தாழமுக்கம் வந்தால் ஜப்பான் மஞ்சள் கடலை அண்டி உயரமுக்கம் வரும். அங்கு உயரமுக்கம் வர இங்கு தாழமுக்கம் வரும். இப்படி இந்த பிரபஞ்சத்தின் தாண்டவமே காற்று மண்டலத்தின் அதி உச்ச நடனமாக நிற்கிறது.
அந்த நடனத்தைக் காணச் சென்று போர்மூடா முக்கோணத்தில் மறைந்த விமானங்கள் எத்தனை, கப்பல்கள் எத்தனை… யாரறிவார்..
அந்த நடனமே இந்த பிரபஞ்சத்தின் மூல வேர். அதையே இறைவனாக்கிய வடிவமே நடராஜர்;.. அந்த நடனமே பிரபஞ்சத்தின் முதல் வெடிப்பு, அதுவே சுடலையில் ஆடும் பிரபஞ்சத்தின் முடிப்பு.
தனது வாழ்வின் நிறைவை அந்த நடனத்தோடு முடித்து, கலையே வாழ்வின் ஆதியும், அந்தமும் என்று வாழ்ந்து காட்டிய நெடிய தமிழ் பெரும் நதியே அப்பர் சுவாமிகள்.
இப்படியொரு சமூகப் புரட்சியாளன் தமிழல்லாத வேறொரு மொழியில் பிறந்திருந்தால் தமிழன் அவனை வேதமாக போற்றிப் படித்திருப்பான். திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதால் அவன் புகழ் தமிழனுக்கும் சரிவரத் தெரியவில்லை, உலகத்திற்கும் உள்ளபடி புரியவில்லை..
இன்றே இப்போதே அப்பரின் ஏதாவது ஒரு தேவாரத்தை ஒரு தடவை பொருளுணர்ந்து படியுங்கள்..
அடுத்த கணம் தமிழ்த்தாயின் காலடியில் வீழ்ந்து வணங்குவீர்கள்..
வாழ்க திருநாவுக்கரசர் புகழ்..!
இந்தத் தொடரின் நிறைவாக அடுத்த சில நாட்களில் வருகிறார்..
தமிழால் கருங்கல்லையே உருக வைக்க முடியுமெனக்காட்டிய தமிழ்ப் பெரும் துறவி பட்டினத்தார்..
கி.செ.துரை 07.02.2012



0 Responses to தமிழால் கருங்கல்லையே மிதக்க வைத்த தமிழர் திருநாவுக்கரசர்...