பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி உறுப்பினர் சிபெய்ன் மக்டொனாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால், அது போர்க்குற்றவாளிகளை சகித்துக் கொள்ளவதில்லை என்ற பிரித்தானியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறியுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான குறிப்பு ஒன்று 3 மாதங்களுக்கு முன்னர், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் மீதான இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ள அந்தப் பணியகம் மறுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது குறித்தும், இராஜதந்திர விலக்குரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் விவாதம் ஒன்றை நடத்தலாம் என்று எண்ணுகிறேன். அவர் விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால், போர்க்குற்றவாளிகளை சகித்துக் கொள்ளவதில்லை என்ற பிரித்தானியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும்.
இலங்கை மீது நாம் மென்போக்கை காட்டினால், அட்டூழியங்களை புரிபவர்களுக்கு நாம் அடைக்கலம் வழங்குபவர்கள் என்று ஏனைய ஆட்சியாளர்களும் நிச்சயமாக கருதத் தொடங்குவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பொதுச்சபையின் முதல்வர் சேர் ஜோர்ஜ் யங், நாடாளுமன்ற உறுப்பினர் மக் டொனாக்கின் கவலையைத் தாம் புரிந்து கொள்வதாகவும், இராஜதந்திர விலக்குரிமை தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பது முக்கியம் என்றும் தெரிவித்தார்.
இதுபற்றி வெளிவிவகாரச் செயலருடன் கடந்த செவ்வாய்க்கிழமை பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும், மீண்டும் ஒருமுறை அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று உறுதிபடக் கூற முடியாவிட்டாலும், மக் டொனாக்கின் கவலை தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் என்ன செய்கிறது என்பது பற்றிய பதில் ஒன்றை வழங்குமாறு கேட்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.



0 Responses to போர்க்குற்றவாளி பிரசன்ன சில்வாவுக்கு மென்போக்கு காட்டுவது ஏன்?