இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் தமிழக எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு வந்து சென்ற இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அடங்கியிருந்த தமிழக எம்.பி.க்களான சுதர்ஷன நாச்சியப்பன், எம்.கிருஷ்ணசாமி, வி.சேத்தன் மற்றும் மணிக்கா தாகூர் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து இந்நால்வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை ராஜீவ் காந்தியுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுத் திட்டமொன்றை செயற்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதை உறுதிப்படுத்தல்.
இராணுவத்திற்கு பதிலாக பொலிஸாரை நிலை நிறுத்துவது குறித்து இலங்கை சர்வதேசத்திற்கு உறுதியான தகவல் வழங்க வேண்டும். வடக்கில் மீனவர் குடும்பங்களின் காணிகள் (சூனிய வலயம்) இராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளது. அவை மீள அம்மக்களிடம் கையளிக்கப்படவேண்டும்.
இந்திய மனித வள அமைப்பு இலங்கைக்கு தமிழ் தெரிந்த ஆங்கில, விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தமிழக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



0 Responses to இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் காங்கிரஸ் எம்.பி.க்கள்