கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரலினால் நடாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ். நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன் தினம் நடைபெற்ற மேதின நிகழ்வில் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று இரவிரவாக தொலைபேசிகளை எடுத்து கேட்கிறார்கள். சிறிலங்காவினுடைய தேசியக் கொடி மீது எங்கள் மக்களுக்கு அத்தனை அதிதிருப்பி இருக்கின்றது.
அந்த நிழ்வின் நிகழ்ச்சியில் இவ்வாறானதொரு நிகழ்ச்சி எமது நிரலில் இருக்கவில்லை. இது ஒரு திணிக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது. குறித்த சம்பவம் நடந்த போது நான் அந்த மேடையில் இருக்கவில்லை. விடத்தை தெரிந்து கொண்ட போது மிகவும் சங்கடமாக இருந்தது.
தமிழ் உணர்வாளர்கள், தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள், தமிழர்களுடைய தேசத்தை கேட்கும் இனத்தை இந்த தேசியக் கொடியை ஒரு காலமும் இப்போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. தந்தை செல்வா அதை சொல்லித்தந்தார். ஆனபடியால் அதனால் ஏற்பட்ட இந்த உணர்வு என் உள்ளத்தையும் பாதிக்கிறது.
இதனால் இந்த நிகழ்வில் நடந்த சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோர விரும்புகின்றேன். எங்கள் உணர்வுகளை எப்போதும் சுமந்து நிற்க வேண்டும்.
இது வரையும் கடைப்பிடித்து வந்த இனத்தின் விடிவு, எங்கள் நிலத்தை நாங்கள் ஆள வேண்டும் என்ற உணர்வு, எங்கள் நிலத்திற்கு போக வேண்டும் என்ற உணர்வு, தாகம் இவற்றை உங்கள் இதயங்களில் இருத்திக் கொண்டு அடங்கிப் போகாமல் அடக்கு முறைகளுக்கு ஆளாகாமல் இதுவரைகாலமும் துணிவுடன் செயற்பட்டது போல தொடர்ந்தும் ஜனாநாயகத்தை விடுவிக்கின்ற சர்வாதிகாரத்திற்கு எதிராக உங்கள் குரலை எழுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற எதிர்க்கட்சி மற்றும் த.தே.கூ இணைந்து நடாத்திய மேதினக் கூட்டத்தில் த.தே.கூ தலைவரின் கைகளில் தேசியக் கொடியினை வைத்து விட்டு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு நின்றதனைக் காணமுடிந்தது. இதனடிப்படையில் தமிழ் உணர்வு மிக்கவர்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே நாடாளுமன்ற உறுப்பினரிடம் பலர் தொலைபேசி மூலம் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



0 Responses to சிங்கக் கொடி ஏந்திய வீரத் தமிழன் இரா. சம்மந்தன்