லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் ஸ்ரற்போர்ட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கறுப்பு ஜுலை நினைவுப் பேரணியை தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி அவர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளையடைந்தது.
நேற்றைய நாளைப் போலவே காலை 9 மணிக்கு பிரித்தானிய தேசியக் கொடியையும், தமீழீழ தேசியக் கொடியையும் ஏற்றி இன்றைய நாளை ஆரம்பித்த திரு. சிவந்தனுக்கு ஆதரவு வழங்கும் வகையில், அவர் தனது போராட்டத்தில் அமர்ந்துள்ள ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலைய (Stratford High Sreet DLR) அருகாமைக்கு தொடர்நது வந்த வண்ணமிருக்கின்றனர்.
அவ்விடத்தில் தமிழ் இளையவர்கள் ஈழத்தமிழ் மக்கள் மீது நடைபெறும் இனவழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருவதால், இவ்வார இறுதியில் ஆரம்பிக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியைக்காண வந்திருக்கும் பல்லின மக்களும் அவ்விடத்தில் தரித்து நின்று விபரங்களை கேட்டறிந்து வருவதனை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
தொடர்நது உற்சாகமாகக் காணப்படும் திரு. சிவந்தன் அவர்கள், தமிழ் உணர்வாளர்கள் தனது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமையிட்டு மகிழ்வடைவதாகத் தெரிவித்தார். ஏற்கனவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் திரு. வை.கோ., மே 17 இயக்கச் செயற்பாட்டாளர் திரு. திருமுருகன் காந்தி உட்பட பலர் திரு. சிவந்தனுக்கு ஆதரவாக காணொளி வழிச் செய்திகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரும் 27ம் திகதி வெள்ளியன்று, ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் பெரியளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரித்தானியா
செய்திக்குறிப்பு
24.07.2012



0 Responses to மூன்றாவது நாளாகத் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்