வடக்கு- கிழக்கிற்கு வெளியேயுள்ள 16 இலட்சம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்றத்துக்குள் பலமான பேரம் பேசும் சக்தியாக செயற்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவை வீட்டிற்கு அனுப்பி வெற்றி கண்டோம். அதனை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்காக போராடி வருகின்றோம். இந்நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நல்லாட்சியை நமது ஆட்சியாக மாற்ற வேண்டும்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே செயற்பட்டு வருவதாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கிற்கு வெளியே சுமார் 16 இலட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக சேவையாற்றவே நாம் ஒன்றிணைந்து பலமான கட்சியாக செயற்பட்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.




0 Responses to த.மு.கூ பலமான பேரம் பேசும் சக்தியாக செயற்படும்: மனோ கணேசன்