Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்களின் அரசியல் பலத்தை உடைக்க நினைக்கும் சக்திகளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் இனங்கண்டு தோற்கடிக்க வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை:

பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கு என்றுமில்லாதவாறு நெருக்கடிமிக்க தேர்தலாக உள்ளது. காரணம் அதிக எண்ணிக்கையான கட்சிகளும் வேட்பாளர்களும் வடக்கு- கிழக்கில் தேர்தலுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழரின் பலத்தை உடைத்து அவர்களை உதிரியாக்கி மிதவாத அரசியல் பங்களிப்பையும் பலவீனப்படுத்துவதே அத்தகைய சக்திகளின் நோக்கமாகும். அத்தகைய நோக்கத்தை முறியடித்து தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது தமிழ் மக்களின் கடமையாகும்.

இத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பை அதிகரிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழ் மக்கள் எல்லோரும் வாக்குரிமை என்ற சுய அடையாளத்தை வெளிப்படுத்துவது கடமையும் உரிமையும் என்பதை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் வாக்களிப்பதை தவறவிடாது பயன்படுத்துவதுடன் அதன் பலத்தை கடந்தகாலத் தேர்தல்களில் வெளிப்படுத்தியதை விட அதிகமாக அக்கறை காட்ட வேண்டுமென கோருகிறது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உலகத்திற்கு வெளிப்படுத்தி தேசியத்தின் மீது பற்றுதி கொண்டவர்களையும் தமிழர் ஒற்றுமைக்கு அமைக்காக உழைக்கும் வேட்பாளர்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளையும் தேர்ந்தெடுப்பது தமிழ் மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல் தேவையாகும். அந்தவகையில் தமிழ் மக்களின் சுய கௌரவத்திற்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் உழைக்கும் தலைமைகளை பாராளுமன்றம் அனுப்புவதும் அவர்களை பலப்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளதென யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கருதுகின்றது.

இன்னோர் பேரினவாதத்தின் தலைமையின் கீழ் அமைச்சுக்களையும் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு அத்தகைய பேரினவாதத்தின் தலைமைகளை மீறிதமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கும் அவர்களால் குரல் கொடுக்கவோ தீர்வுகாணவோ முடியுமா? என்றகேள்வி எழுகின்றது. இத்தகைய பேரினவாத சக்திகளுக்கு முண் சொந்த வாழ்விடத்தையும் வாழும் உரிமையையும் இழந்து சுய கௌரவமற்ற இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்ட தமிழர் தமது வாக்குரிமையாலும் அதனை புத்திசாதுரியமாக பயன்படுத்துவதன் மூலமாகவுமே நிம்மதியான கௌரவமான வாழ்வை எதிர்காலத்தில் எட்டமுடியும்.

தமிழ் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி உள்ள அரசியல் கட்சிகளுக்குள்ளேயே தமிழ் விரோத சக்திகள் ஊடுருவியுள்ளனர். அவர்களை இனங்கண்டு சரியானவர்களை தேர்ந்தெடுப்பது தமிழ் மக்களின் கடமையாகும். விகிகிதாசார தேர்தல் முறையில் விருப்புவாக்கு என்பதை முன்னிறுத்தி தமிழ் விரோதசக்திகளை இலகுவாக அகற்றிவிடமுடியும். கடந்த அறுபது வருட அரசியல் அனுபவத்திற்குள்ளால் தமிழ் மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகஆசிரியர் சங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் தமிழ் தேசியத்திற்கு உரத்து குரல்கொடுக்கும் கட்சிகளுக்கும் அவற்றின் வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பது தமிழர்களின் கடமையாகும்.

எனவே தமிழ் மக்கள் வாக்களிப்பை முழுமையாக மேற்கொள்வதுடன் தமிழ் தேசியத் தலைமைகளுக்கு அதாவது தேசியம் தமிழர் சுயநிர்ணய உரிமை வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்பவற்றுடன் மீள்குடியேற்றம், சர்வதேச விசாரணை என்பன அவசியம் என்பதை தற்றுணிவுடன் மிதவாத அணுகுமுறைக்கூடாக வலியுறுத்தக் கூடியவர்களையும் தேர்ந்தெடுத்து பராளுமன்றம் அனுப்புவதன் மூலம் தமிழர் தமது எதிர்காலசந்ததியின் இருப்பை உறுதி செய்யமுடியும் என்பதை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமிழ் மக்களிடம் வினையமாக விண்ணப்பம் செய்கிறது

நன்றி
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

0 Responses to தமிழரின் பலத்தை உடைக்க நினைக்கும் சக்திகளை தோற்கடிப்போம்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com