Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் புதிய அரசாங்கத்தில் ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகை இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

“நல்லிணக்க செயற்பாடுகள் உச்ச அளவில் முன்னெடுக்கப்படுகிறது என்பதில் சர்வதேசம் நம்பிக்கை கொண்டிருக்கும் சூழ்நிலையிலேயே பான் கீ மூனின் விஜயம் நிகழ்கின்றது. அவர் அழுத்தங்களை வழங்குவதற்காக வரவில்லை. மாறாக நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்வதே வருகின்றார்.” என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று  புதன்கிழமை அரசாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலத்தில் இலங்கை குறித்து சர்வதேசம் வைத்திருந்த நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாடுகள் உயர்ந்த இடத்தில் உள்ள நாடு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கம் பான் கீ மூனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் நாட்டுக்கு மோசமான விளைவையே ஏற்படுத்தவிருந்தது. விசாரணைகள் உள்ளிட்ட சகலவற்றுக்கும் அதில் இணக்கம் காணப்பட்டிருந்தன.

எனினும், பான் கீ மூன் தற்பொழுது இலங்கை வந்திருப்பது முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையிலாகும். நல்லிணக்க செயற்பாடுகளில் உயர்ந்த இடத்தில் இருப்பதை சகல நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்றங்களையும், நல்லிணக்க செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதைப் பார்வையிடுவதற்காகவுமே அவர் இலங்கை வருகிறார்.

அண்மையில் ஐ.நா செயலாளர் நாயகம் கலந்துகொண்ட செவ்வியொன்றில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. அதற்கு அவர் சிறப்பான பதில்களை வழங்கியிருந்தார். இதிலிருந்து இலங்கை குறித்த ஐ.நாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

இலங்கையின் நீதித் துறையானது மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபையிடமும், சர்வதேசத்திடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அப்படி இருக்கவில்லை. இதனால்தான் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்கள் இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்படியான அழுத்தம் கொடுத்த பலர் இன்று அமைதியாக இருக்கின்றனர்.

நல்லிணக்க செயற்பாடுகள் என்பன சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் நன்கு தெரியும். இதனால்தான் இலங்கை குறித்து அவர்களிடம் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை வந்திருக்கும் பான் கீ மூன் எந்தவிதமான அழுத்தங்களையும் அரசாங்கத்துக்குக் கொடுக்கப்போவதில்லை.” என்றுள்ளார்.

0 Responses to பான் கீ மூனின் வருகை இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com