Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் வாள்வெட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள், ஆகவே அவற்றைப் பற்றிய முழு விபரங்களும் இராணுவத்திடம் உண்டு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாவது, “எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு படித்த பண்பட்ட சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை.

வாள் வெட்டுக் கலாசாரம், போதைப்பொருள் கலாசாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை.

அண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள், நாம் வாள்வெட்டுக் கலாசாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள்.

குறித்தக் குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும் ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது.

வடக்குப் பகுதியில் தமிழ் பேசுகின்ற பொலிஸாரின் எண்ணிக்கை அளவில் மிகச் சிறியது எனவும் கூடுதலான தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் அமர்த்துமாறும் நாம் பொலிஸ் திணைக்களத்தைத் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றோம். இன்னும் அது நடைபெறவில்லை. ஆனால், பயிற்சிகள் 400 தமிழ் இளைஞர்களுக்குக் களுத்துறையில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் வடக்குப் பகுதியில் இருக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை வடபகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனாமதேய அறிவிப்புக்களும் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இவை அனைத்தும் எம்மைச் சுற்றி ஏதோ ஒரு தவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதையே எமக்கு உணரத்துவதாக உள்ளது.

தெற்கில் பிரபாகரன் படை என்று ஒன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இராணுவத்துக்கு எதிரான சுலோகங்களைக் கக்கி வருகின்றது. இவை நம்மவரா அல்லது வேறு சக்தியா என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எனவே, நாம் இச் சந்தர்ப்பத்தில் எமது உணர்ச்சிகளுக்கும் மனக்கிலேசங்களுக்கும் இடம்கொடுக்காது எமது வருங்கால சந்ததியின் நன்மை கருதியும் அவர்களை முறையாக நெறிப்பத்த ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுத்து அதற்கமைவாக செயற்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய ஒரு தருணம் இது என்பதை நாம் மனதில் கொள்ளுதல் அவசியம்.

அரசியல் என்ற நிலைக்கு அப்பால் தமிழர்கள் இன்னும் 25 அல்லது 50 வருடங்களில் இப் பகுதிகளில் எவ்வாறு வாழ வேண்டும். அவர்களுக்கு எழுச்சி மிக்கதும் சுகாதாரமானதுமான ஒரு வாழ்க்கை முறைமையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவர்கள் எவ்வாறு வழிநடாத்தப்பட வேண்டும். என்ற பல கேள்விகள் தற்போது எம்மை வாட்டி வதைக்கின்றன. எமது தூரநோக்குச் சிந்தனையின் கீழ் எமது மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு அவற்றில் வெற்றி காணப்படல் வேண்டும் என்ற எண்ணமும் எம்மை வாட்டி வருகின்றன.

'மாற்றங்கள் மட்டுமே மாறாதவை' என்ற கோட்பாட்டிற்கமைவாக எமது அரசியல் சூழ்நிலைகள் விரைவில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவன என நாம் நம்புகின்றோம். தற்போதைய அரசாங்கம் இரண்டு பிரதான கட்சிகளின் ஒரு சங்கமமாக உருவாகியுள்ளதால் இனப் பிரச்சினைகள் தொடர்பாக கூடுதலாகக் கவனம் எடுத்துவர வாய்ப்பிருப்பது எமக்குச் சற்று மனஆறுதலைத் தருகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to ‘ஆவா குழு’ இராணுவத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட குழு; அவர்களிடம் முழு விபரமும் உண்டு: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com