இம்மாணவர்களில் பெற்றோரையும், உறவுகளையும், உடல் உறுப்புகளையும் இழந்த மற்றும் வசதிகளற்ற மாணவர்களிற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்ட நிகழ்வு 13.06.10 ஞாயிறு அன்று காமினி மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் நடராசா ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த உதவியினை சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு [டென்மார்க்], நேசக்கரம் [ஜெர்மனி], சமூக அபிவிருத்தி அமைப்பு [சிறிலங்கா] ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து புலம்பெயர் தேசத்து மக்களின் உதவிகளை ஒருங்கிணைத்துப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கைகளில் நேரடியாக இந்நிகழ்வின் மூலம் சேர்ப்பித்துள்ளனர்.
84 மாணவர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான பாடசாலை உபகரணங்கள், ஆடைகள், மற்றும் பாடசாலைக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் என்பன வழங்கப்பட்டதோடு போக்குவரத்திற்கான உதவிகள் அம்மாணவர்களிற்கு தொடர்ச்சியாகக் கிடைக்கும்படியான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்கு இலங்கையின் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரா, பிரதியமைச்சர் விஜித் டி சொய்சா, வடமாகாண கல்விப்பணிப்பாளர் அரியரத்தினம், வலயக் கல்விப்பணிப்பாளர் தெய்வேந்திரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாதிக்கபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் புனர்வாழ்வு அமைச்சரை நேரடியாகச் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் வேண்டுதல்களையும் எடுத்துச் சொன்ன நிகழ்வாகவும் இது அமைந்தது.
அது மட்டுமல்லாமல் காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் வைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும் நேரடியாக அமைச்சரிடம் அவர்களது விடுதலைக்கு ஆவன செய்யும்படி கோரிக்கைகளை முன்வைத்தனர்.





0 Responses to போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் உதவிகள்