வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கட்சி என்ற ரீதியில் ஜே.வி.பி. அனைத்துத் தலையீடுகளையும் மேற்கொள்ளும் என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவி துவாரகா இராசையாவின் உறவினர்கள் மற்றும் கல்மடு கிராம மக்களைச் சந்திப்பதற்காக சோமவன்ச உள்ளிட்ட ஜே.வி.பியின் தலைவர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்றிருந்தனர்.தமது குடும்பங்களில் தலா ஒருவர் காணாமல் போயோ அல்லது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டோ இருப்பதாகக் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்துத் தாம் ஜனாதிபதி, இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் என அனைத்துத் தரப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் பிரதிகளையும் கிராம மக்கள் ஜே.வி.பியின் தலைவர்களிடம் காண்பித்துள்ளனர்.
இங்கு உரையாற்றிய சோமவன்ச, யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கு மக்களை சந்திக்க முடியாதிருந்தது. பல சந்தர்ப்பங்களில் முயன்றபோதும் அது வெற்றியளிக்கவில்லை. யுத்தம் முடிபடைந்த நிலையில் வடக்கு மக்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மக்களின் துயர அனுபவத்தை ஜே.வி.பியினர் கொண்டுள்ளனர். அந்தத் துயரத்தை அறிந்துள்ளோம்.
வட பகுதி மக்களுக்காகத் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் சோமவன்ச குறிப்பிட்டுள்ளார். கல்மடுவுக்கு விஜயம் செய்த ஜே.வி.பி யின் குழுவில் அனுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், மருங்கன் மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.



0 Responses to வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ஜே.வி.பி. தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்: சோமவன்ச