நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதைக் கண்டித்தும், அவரை உடனே எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்திடக் கோரும் கையெழுத்து இயக்கம் குவைத் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.குவைத் வாழ் தமிழர்களிடமிருந்து பெறப்படும் கையெழுத்துப் படிவத்துடன் கோரிக்கை மனுவையும் இணைத்து தமிழக முதல்வருக்கு அனுப்பித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற கையெழுத்து இயக்கத்தினை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தொடங்கி தமிழக அரசிற்கு அழுத்தம் தர வேண்டுமென்ற விருப்பத்தினையும் குவைத் நாம்தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இக்கைழுத்து இயக்கத்தின் துணை இயக்கமாக, தமிழகத்தில் இயங்கி வரும் தமிழிய இயக்கங்களுக்கும் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு:
அய்யா,
குவைத் வாழ் தமிழர்களின் சார்பில் தங்களுக்கு எமது வணக்கங்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் அமைப்பின் வழி தாங்கள் ஆற்றிவரும் தமிழின மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் தனது குரலினை ஓங்கி ஒலித்து வரும் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள், தமிழகத் தமிழர்கள் சிங்கள அரசினால் அவ்வப்போது துன்புறுத்தப்படுவதும் சுட்டுக்கொல்லப்படுவதுமாக இருப்பதைக் கண்டு, தனது அடக்கவியலா உணர்ச்சிகளை பொதுக்கூட்டமொன்றில் வெளிப்படுத்தியமைக்கு எதிராக, தேசியப் பாதுகாப்பு சட்ட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டமை அறிந்து நாங்கள் மிகவும் கவலைகொண்டுள்ளோம்.
தமிழர் நலனையும் தமிழ் மொழி இன மேம்பாட்டிலும் மிகுந்த அக்கறையோடும் உள்ளார்ந்த விருப்பத்தோடும் தமிழகத்தில் தாங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும் அதன் தலைவர்களும் செயல்பட்டு வந்தாலும், தமிழனுக்குகாக குரல் கொடுத்தமைக்காக நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தமிழக மைய அரசுகளின் இவ்வடக்குமுறைக்கு எதிராக தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டாங்கள் நடத்தி, கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதோடு, தமிழர்களின் உரிமையினை நிலைநாட்ட வேண்டுமென்பதே எம் போன்ற அயலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையாவும் உள்ளது.
உலகத் தமிழினம், வரலாற்றில் என்றுமில்லாத பேரழிவினையும் பெரும் எதிர்ப்பினையும் சந்தித்து வரும் வேளையில், தமிழின உணர்வு கொண்டுள்ள தங்களைப் போன்ற இயக்கத் தலைவர்கள், தத்தமது தனித்த கொள்கைகளையும், அது சார்ந்து கொண்டுள்ள கொள்கை வேறுபாடுகளையும் களைந்து, ஒரு கூட்டமைப்பாக ஒற்றைச் சங்கமாக இருந்து, தமிழர்களின் உரிமையினை மீட்டெடுக்க போராட வேண்டுமென்பதும், தேர்தல் காலங்களின் ஒருமித்த கருத்தினை உருவாக்கி ஒற்றை கூட்டணியாக நின்று தமிழின விரோதிகளையும் எதிரிகளையும் தோற்கடிக்க வேண்டுமென்பதும் எமது முதன்மையான கோரிக்கையாகும்.
அதன் தொடக்கமாக சீமான் விடுதலை கோரும் இயக்கமொன்றைத் தொடங்கி, அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒரே அணியில் நின்று, வலுத்த போராட்டங்களை மேற்கொண்டு திரு.சீமான் அவர்கள் மீதான பொய்யான, அடக்குமுறைச் சட்டங்களை உடைத்தெறிந்து அவர்களை சிறைமீட்கவும், தமிழர் உரிமையினை நிலை நாட்டிடவும் தாங்கள் முழு முயற்சியினை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இதே கோரிக்கையின் அடிப்படையில் உலக்த்தமிழித்தினை ஒருங்கிணைத்து, இப்போதும் எப்போதும் தமிழனின் குரல் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்திட வகை செய்ய வலியுறுத்துகிறோம்.
உலகத்தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்து வரும் திரு.சீமானின் விடுதலையே எம்போன்றோரின் முதன்மையான எதிர்பார்ப்பாக இருப்பதனை அறியத்தருவதோடு, இதற்கென தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எங்களின் முழு ஒத்துழைப்பினை எப்போதும் வழங்குவோம் என உறுதியளிக்கின்றோம்.
மொழி மீட்க! இனம் காக்க!
தமிழின உணர்வாளர்களே ஒன்றுபடுக!
தமிழ் அமைப்பின் தலைவர்களே ஒன்றுதிரண்டிடுக!
செந்தமிழன் சீமானின் விடுதலைக்கு போராடிடுக!
ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!
குவைத் வாழ் தமிழர்கள் (நாம் தமிழர் கட்சி)
தமிழ்நாடன்.
மேலதிக தொடர்புகளுக்கு:-
thamizhnadan@gmail.com
0096566852906
*************************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to செந்தமிழன் சீமானின் விடுதலைக் கோரும் கையெழுத்து இயக்கம்: குவைத் நாம் தமிழர் சார்பில் தொடங்கப்பட்டது