2011 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், புதிய நம்பிக்கைகளையும் ஏற்படுத்துவதுடன், நல்ல செய்திகளையும் வழங்கவேண்டும் என வாழ்த்துவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.அது நேற்று (01) வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தி வருமாறு:
தமிழ் மக்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 2011 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், புதிய நம்பிக்கைகளையும் ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும் என நாம் வாழ்த்துகிறோம்.
அதேசமயம், 2010 ஆம் ஆண்டின் சில நினைவுகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
1. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றிருந்தார். ஆனால் லண்டனில் பெருமளவான தமிழ் மக்கள் திரண்டு, சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியிருந்தனர். சிறீலங்கா இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகளும் சனல் போஃர் செய்தி நிறுவனத்தால் ஒளிபரப்பப்பட்டது. நீதிமன்ற சட்டங்கள் நாம் அறிந்தவையே. சிலி நாட்டின் அரச தலைவர் பினோசெற் ஸ்பெய்ன் சென்றபோது, ஸ்பெய்ன் நீதிபதி அவரை கைது செய்யும் உத்தரவுகளை வழங்கியிருந்தார். அவர் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார். மகிந்தாவின் ஒக்ஸ்போட் உரை நிறுத்தப்பட்டதுடன், அவர் லண்டனில் இருந்தும் தப்பியோடியிருந்தார்.
2. அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் இரகசிய தகவல் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளிக்கொண்டுவந்திருந்தது. இது எமக்கு நத்தார் பண்டிகை பரிசாக அமைந்திருந்தது. ஏனெனில் அதில் அமெரிக்கா வெளியில் தெரிவிக்காத பல விடயங்கள் அடங்கியிருந்தன. சிறீலங்கா அரசுக்கும், துணைஇராணுவக் குழுக்களுக்கும் இடையிலான உறவுகள், ஈ.பி.டி.பி, கருணா குழு போன்ற குழுக்கள் படுகொலைகள், கடத்தல்கள், பெண்களை பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுத்தியது தொடர்பிலும் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார். வன்னியில் நடைபெற்ற போரில் தமிழ் மக்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களை பொய் கூறுமாறு சிறீலங்கா அரசு வற்புறுத்தியதை பிளேக் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியிருந்தார். மகிந்தாவும், அவரின் அரசுமே 2009 ஆம் ஆண்டு படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3. மகிந்தா ராஜபக்சாவின் குடும்பம் தொடர்பில் அமெரிக்கா குறைந்த மதிப்பையே கொண்டுள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு 2011 ஆம் ஆண்டு நல்ல செய்திகளை தாங்கிவரும் ஆண்டாக அமைய நாம் வாழ்த்துகின்றோம்.
தமிழாக்கம்: ஈழம்நியூஸ்



0 Responses to புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நல்ல செய்திகளை வழங்க வேண்டும்: ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு