இலங்கைத் தீவில் தமிழ் மக்களை இராணுவம் ஒருபுறம் வாட்டிவதைக்கின்றது. மறுபுறம் தமிழ்க் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் துன்பப்படுத்துகின்றனர். இவ்வாறான கொடூரச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஐக்கியம் என்பவற்றைப் பற்றிப் பேசும் அரசு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டால் இவை எப்படி சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சோதனை நடவடிக்கை என்ற போர்வையில் சிறைச்சாலை அதிகாரிகள் தமிழ் அரசியல் கைதிகளை நேற்று மாலை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கூறியவை வருமாறு:
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என தெரியவருகிறது. ஊனமுற்றோர்களையும் கண்மூடித்தனமாக அவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சரிடம் முறையிட அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவருடன் அழைப்பை ஏற்படுத்த முடியாமல் போனது.
எனினும் இது விடயம் தொடர்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிமின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் நடவடிக்கை எடுப்பார் என நாம் நம்புகின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களை இராணுவம் ஒருபுறம் வாட்டிவதைக்கின்றது. மறுபுறம் தமிழ்க் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் துன்பப்படுத்துகின்றனர். இவ்வாறான கொடூரச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கித் தள்ளப்படலாம்.
நாட்டில் இவ்வாறான கொடூர சம்பவங்கள் அரங்கேறுவதன் மூலம் இனங்களுக்கடையிலான நல்லுறவு, புரிந்துணர்வு என்பவை பாதிக்கப்படும். என்றார்
அத்துடன், இனங்களுக் கிடையில் ஐக்கியம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாடு எந்தப் பாதையில் பயணிக்கின்றது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார் சுரேஷ்.
ஊனமுற்ற கைதிகள் மீதும் ஈவிரக்கமற்ற தாக்குதல்! - த.தே.கூ. கண்டனம்
பதிந்தவர்:
Anonymous
28 November 2011



0 Responses to ஊனமுற்ற கைதிகள் மீதும் ஈவிரக்கமற்ற தாக்குதல்! - த.தே.கூ. கண்டனம்